எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் திருச்சி மாநகர அ.ம.மு.க., தீபா பேரவையினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்


எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் திருச்சி மாநகர அ.ம.மு.க., தீபா பேரவையினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்
x
தினத்தந்தி 13 Jun 2019 11:15 PM GMT (Updated: 13 Jun 2019 8:32 PM GMT)

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் திருச்சி மாநகர அ.ம.மு.க., தீபா பேரவையினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

திருச்சி,

திருச்சி புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ரத்தினவேல் எம்.பி. இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று மாலை 4.30 மணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் கார் மூலம் திருச்சி கல்லுக்குழியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்தார். அங்கு முதல்-அமைச்சரும் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.ம.மு.க. மற்றும் தீபா பேரவையினர் 150-க்கும் மேற்பட்டவர்கள் இணைந்தனர்.

திருச்சி மாநகர் மாவட்ட பாலக்கரை பகுதி அ.தி.மு.க. செயலாளர் கலிலுல் ரகுமான் ஏற்பாட்டின் பேரில் அ.ம.மு.க. மாவட்ட மீனவரணி செயலாளர் மீன்கடை சுலைமான், 10-வது வட்ட செயலாளர் முருகேசன், வட்ட பிரதிநிதி சுந்தரம், 19-வது வட்ட இணை செயலாளர் அபுபக்கர், வட்ட பிரதிநிதி ராஜா, தீபா பேரவை பாலக்கரை பகுதி செயலாளர் அமலா பாபுராஜ், முன்னாள் கவுன்சிலர் தில்சாத் பேகம் உள்பட 150 பேர் அ.தி.மு.க.வில் தங்களை இணைத்து கொண்டனர். அவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பின்னர் அவர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான ப.குமார், அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, திருச்சி மாவட்ட பால் உற்பத்தியாளர் ஒன்றிய ஆவின் சேர்மன் கார்த்திகேயன், பரமேஸ்வரி முருகன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் சிவபதி, முன்னாள் எம்.எல்.ஏ. பரஞ்சோதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அரசு விருந்தினர் மாளிகையில் சிறிது ஓய்வுக்கு பின்னர், திருச்சி கலையரங்கில் நடந்த ரத்தினவேல் எம்.பி. இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு கார் மூலம் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சென்றார். அங்கு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்-அமைச்சர், சேலம் மாவட்டம் உத்தமசோழபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்டார். பின்னர் இரவு கார் மூலம் கோவை விமான நிலையம் சென்று, அங்கிருந்து விமானம் மூலம் நள்ளிரவு சென்னை சென்றடைந்தார்.

Next Story