ரோட்டில் கவிழ்ந்த லாரியில் சிக்கி வியாபாரி சாவு மோட்டார்சைக்கிளில் புறப்பட முயன்றபோது பரிதாபம்


ரோட்டில் கவிழ்ந்த லாரியில் சிக்கி வியாபாரி சாவு மோட்டார்சைக்கிளில் புறப்பட முயன்றபோது பரிதாபம்
x
தினத்தந்தி 13 Jun 2019 11:15 PM GMT (Updated: 13 Jun 2019 8:49 PM GMT)

புஞ்சைபுளியம்பட்டி அருகே மோட்டார்சைக்கிளில் புறப்பட முயன்றபோது ரோட்டில் கவிழ்ந்த லாரியில் சிக்கி வியாபாரி பரிதாபமாக இறந்தார்.

புஞ்சைபுளியம்பட்டி,

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள கணக்கரசம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 58). புகையிலை வியாபாரி.

இவர் நேற்று வீட்டுக்கு தேவையான மளிகை சாமான்கள் வாங்க மோட்டார் சைக்கிளில் தாசம்பாளையம் சென்றார். அங்கு கடையில் மளிகை பொருட்கள் வாங்கி விட்டு மோட்டார்சைக்கிளை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு புறப்பட தயாரானார்.

அப்போது கோவையில் இருந்து பவானிசாகர் நோக்கி கழிவு அட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. தாசம்பாளையத்தில் உள்ள ஒரு வளைவில் திரும்பும்போது எதிர்பாராதவிதமாக அந்த லாரி ரோட்டில் நின்று கொண்டிருந்த பழனிசாமி மீது கவிழ்ந்தது.

இந்த விபத்தில் லாரியின் அடியில் சிக்கி பழனிசாமி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.

இதைத்தொடர்ந்து பொக்லைன் எந்திரம் கொண்டுவரப்பட்டு லாரி அங்கிருந்து அகற்றப்பட்டு பழனிசாமி மீட்கப்பட்டார். உடனே அவர் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். பழனிசாமிக்கு நஞ்சம்மாள் என்ற மனைவியும், மஞ்சுஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். பழனிசாமியின் உடலை பார்த்து அவருடைய மனைவியும், உறவினர்களும் அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

இந்த விபத்து சம்பவம் குறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story