கோவையில் தொடரும் பரபரப்பு, ஐ.எஸ். ஆதரவாளர்கள் 3 பேரின் வீடுகளில் போலீசார் சோதனை - செல்போன்கள், சிம்கார்டுகள் பறிமுதல்


கோவையில் தொடரும் பரபரப்பு, ஐ.எஸ். ஆதரவாளர்கள் 3 பேரின் வீடுகளில் போலீசார் சோதனை - செல்போன்கள், சிம்கார்டுகள் பறிமுதல்
x
தினத்தந்தி 13 Jun 2019 10:30 PM GMT (Updated: 14 Jun 2019 12:30 AM GMT)

கோவையில் ஐ.எஸ். ஆதரவாளர்கள் என்று சந்தேகப்படும் 3 பேரின் வீடுகளில் மாநகர போலீசார் நேற்று சோதனை நடத்தினார்கள். இதில் செல்போன்கள், சிம்கார்டுகள் உள்பட மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோவை,

இலங்கை தலைநகர் கொழும்பில் கடந்த ஏப்ரல் மாதம் 21-ந் தேதி ஈஸ்டர் பண்டிகையன்று தேவாலயம், நட்சத்திர ஓட்டல்களில் சக்திவாய்ந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இதில் 250-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். 500-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

இலங்கை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாத அமைப்பை சேர்ந்த ஜஹரான் ஹசிமினுடன் சமூக வலைத்தளங்கள் மூலம் கோவையை சேர்ந்த சிலர் தொடர்பு கொண்டிருந்ததை தேசிய புலனாய்வு அதிகாரிகள்(என்.ஐ.ஏ.) கண்டுபிடித்தனர்.

அதன்பேரில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று முன்தினம் கோவை வந்து 7 இடங்களில் சோதனை நடத்தினார்கள். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கோவையில் நேற்று ஐ.எஸ். ஆதரவாளர்கள் 3 பேர் வீடுகளில் கோவை மாநகர போலீசார் சோதனை நடத்தினார்கள்.

கோவையை சேர்ந்த 3 பேர் ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு கொண்டுள்ளனர் என்ற ரகசிய தகவல் கோவை மாநகர நுண்ணறிவு போலீசாருக்கும், சிறப்பு நுண்ணறிவு போலீசாருக்கும் கிடைத்தன.

அதன்பேரில் கோவை தெற்கு உக்கடம் அன்புநகரை சேர்ந்த ஷாஜகான் (வயது 25), கோவை வின்சென்ட் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் முகமது உசேன் (25), கோவை கரும்புக்கடை சாரமேடு பகுதியை சேர்ந்த ஷேக் சபியுல்லா(36) ஆகிய 3 பேரின் வீடுகளில் நேற்றுக்காலை 5.30 மணி முதல் மாநகர போலீசார் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினார்கள்.

இவர்களில் ஷாஜகானும், ஷேக் சபியுல்லா ஆகிய 2 பேரும் மருத்துவ பிரதிநிதிகளாக பணியாற்றி வருகிறார்கள். சோதனை நடந்த ஒவ்வொரு இடத்திலும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர்..

நேற்று காலை முதல் மாலை வரை 3 இடங்களில் நடந்த இந்த சோதனையில் ஏராளமான செல்போன்கள், சிம் கார்டுகள், கணினி ஹார்டு டிஸ்க்குகள், பென் டிரைவ், மெமரி கார்டுகள் போன்ற மின்னணு சாதனங்களும், வங்கி கணக்கு ஆவணங்கள், தடை செய்யப்பட்ட அமைப்புகளை பற்றிய கையேடுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இது குறித்து கோவை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தடை செய்யப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் சமூக வலைத்தளங்கள் மூலம் இவர்கள் 3 பேரும் தொடர்பில் இருந்துள்ளனர். மேலும் ஐ.எஸ். அமைப்பின் கொள்கைகள், தீவிரவாத செயல்களை இளைஞர்களிடம் சமூகவலைதளங்கள் மூலம் பரப்பி வந்துள்ளனர்.

இவர்கள் ஐ.எஸ். அமைப்பிற்கு ஆதரவாக செயல்பட் டதற்கும் ஆதாரங்கள் உள்ளன. இவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் 21-ந் தேதி இலங்கையில் நடந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜஹரான் ஹசிமினின் ஆதரவாளர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களை நடத்திய ஜஹரான் ஹசிமினின் செயல்களை புகழ்ந்தும், பாராட்டியும் சமூகவலைதளங்களில் இவர்கள் கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.

இவர்கள் ஐ.எஸ். அமைப்பிற்கு அடித்தளம் அமைத்து அந்த அமைப்பின் சார்பில் கோவையில் தீவிரவாத தாக்குதல் நடத்தவும் சதி திட்டம் தீட்டியதும் விசாரணை யில் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து இவர்கள் 3 பேர் மீதும் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டப்பிரிவு (உபா) 18, 38, 39-ன் கீழ் போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நேற்றுமாலை 3 பேரின் வீடுகளிலும் சோதனை முடிந்தது. அதன்பிறகு அவர்களின் வீடுகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆட்சேபகரமான பொருட்கள் மற்றும் ஆவணங்கள் குறித்து விசாரிக்க 3 பேரையும் போலீஸ் பயிற்சி பள்ளிக்கு அழைத்துச் சென்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். அதன் முடிவில் தான் அவர்கள் கைது செய்யப்படுவார்களா? அல்லது விடுவிக்கப்படுவார்களா? என்ற விவரங்கள் தெரியவரும்.

இந்த நிலையில், நேற்றுமுன்தினம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவையை சேர்ந்த முகமது அசாருதீன் (வயது 32), அக்ரம் ஜிந்தா (26), ஷேக் இதயத்துல்லா (38), அபுபக்கர் (29), சதாம் உசேன் (26), இப்ராகிம் என்ற ஜாகின் ஷா (28) ஆகிய 6 பேரின் வீடுகள் மற்றும் முகமது அசாருதீன் அலுவலகம் ஆகிய 7 இடங்களில் சோதனை நடத்தினார்கள். இதில் ஏர்கன்னில் பயன்படுத்தப்படும் தோட்டாக்கள், செல்போன்கள் உள்பட பல்வேறு எலக்டிரானிக் பொருட்களை அவர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த கும்பலுக்கு தலைவனாக செயல்பட்ட முகமது அசாருதீன் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டப்பிரிவின் (உபா)கீழ் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்து அவரை கொச்சிக்கு அழைத்துச் சென்றனர்.

இதில் முக்கிய நபரான முகமது அசாருதீனிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.

முகமது அசாருதீன் ‘கிளாபக் ஜி.எப்.எக்ஸ்’ என்ற முகநூல் பக்கத்தை உருவாக்கி உள்ளார். அதன்மூலம் அவர் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை பற்றிய கருத்துகளை பரப்பி உள்ளார்.

மேலும் தென்னிந்தியாவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை வேரூன்ற செய்வதற்கான பணிகளை முகமது அசாருதீன் மூலம் இலங்கை பயங்கரவாத அமைப்பை சேர்ந்த ஜஹரான் ஹசிமின் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. கோவையில் பறிமுதல் செய்யப்பட்ட எலக்டிரானிக் ஆவணங்களை டெல்லியில் உள்ள என்.ஐ.ஏ. ஆய்வகத்துக்கு அனுப்பி சோதனை நடத்த திட்டமிட்டு உள்ளதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story