திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் தூக்கில் பிணமாக தொங்கினார்; சாவில் சந்தேகம் இருப்பதாக தாய் போலீசில் புகார்


திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் தூக்கில் பிணமாக தொங்கினார்; சாவில் சந்தேகம் இருப்பதாக தாய் போலீசில் புகார்
x
தினத்தந்தி 14 Jun 2019 11:30 PM GMT (Updated: 14 Jun 2019 7:58 PM GMT)

திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் தூக்கில் பிணமாக தொங்கினார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக தாய் போலீசில் புகார் செய்துள்ளார்.

ஸ்ரீபெரும்புதூர்,

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தை அடுத்த சாத்துக்கூடல் பகுதியை சேர்ந்தவர் கலைச்செல்வி. 3 மகள்களை உடைய இவரது கணவர் 16 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்டார். 2 மகள்களுக்கு திருமணம் செய்து வைத்த கலைச்செல்வி தன்னுடைய கடைசி மகளான கீர்த்தனா (வயது 19) வை கடந்த மார்ச் மாதம் கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அடுத்த ஆலச்சக்குடி பகுதியை சேர்ந்த ராஜ் (25) என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார்.

ராஜ் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வந்தார். கீர்த்தனாவுக்கு திருமணத்தின்போது 10 பவுன் நகை வரதட்சணையாக போடப்பட்டது.

திருமணம் முடிந்த சில நாட்களில் கீர்த்தனா, ராஜ் இருவரும் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சாய் லட்சுமி நகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து புது வாழ்க்கையை சந்தோ‌ஷமாக தொடங்கினர்.

திருமணம் முடிந்த ஒரு மாதத்தில் ராஜ் தன்னுடைய மனைவியிடம் உங்கள் வீட்டில் நகை குறைவாக போட்டுள்ளனர். உன்அம்மாவிடம் நகை அல்லது பணம் வாங்கி வரும்படி கேட்டு துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. கீர்த்தனா இது குறித்து தன்னுடைய தாய் கலைச்செல்வியிடம் செல்போனில் பேசியுள்ளார்.

இதையடுத்து கலைச்செல்வி அக்கம் பக்கத்தில் கடன் வாங்கி ரூ.50 ஆயிரத்தை கொண்டு வந்து கொடுத்துள்ளார். மகளை சமாதானப்படுத்தி விட்டு வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் 3 நாட்களுக்கு முன்னர் கீர்த்தனா தாய் கலைச்செல்விக்கு போன் செய்து மீண்டும் பணம் கேட்டு கணவர் துன்புறுத்துவதாக கூறியுள்ளார். நேற்று முன்தினம் கீர்த்தனாவுக்கும் ராஜ்க்கும் தகராறு ஏற்பட்டது. பின்னர் ராஜ் மனைவியை தரக்குறைவாக பேசிவிட்டு வெளியே சென்று விட்டதாக கூறப்படுகிறது. இரவு ராஜ் வீடு திருப்பியபோது கீர்த்தனா தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து அறிந்த கலைச்செல்வி தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் விநாயகம் கீர்த்தனா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்து விசரித்து வருகிறார்.

திருமணம் நடந்து 3 மாதங்களே ஆவதால் காஞ்சீபுரம் ஆர்.டி.ஓ.வும் விசாரித்து வருகிறார்.


Next Story