மாம்பலத்தில் துணிகரம்; மிளகாய் பொடி தூவி நவரத்தின கற்கள் கொள்ளை, தப்பி ஓடிய வாலிபர் கைது


மாம்பலத்தில் துணிகரம்; மிளகாய் பொடி தூவி நவரத்தின கற்கள் கொள்ளை, தப்பி ஓடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 14 Jun 2019 11:15 PM GMT (Updated: 14 Jun 2019 8:30 PM GMT)

சென்னை மாம்பலம் பகுதியில் மிளகாய் பொடி தூவி நவரத்தின கற்களை கொள்ளையடித்துவிட்டு தப்பி ஓடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை,

தேனி மாவட்டம் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவர் நவரத்தின கற்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்கிறார். செல்வம் நேற்று முன்தினம் தேனியில் இருந்து சென்னை வந்து மாம்பலம் பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் தனது நண்பர்களுடன் தங்கியிருந்தார்.

அப்போது செல்வத்திற்கு ஏற்கனவே அறிமுகமான பாஸ்கரன் (வயது 37) என்பவர் செல்வம் தங்கியிருந்த லாட்ஜில் உள்ள அறைக்கு வந்தார். அப்போது நவரத்தின கற்களை வாங்குவதாக கூறினார். செல்வமும் தான் வைத்திருந்த நவரத்தின கற்களை பாஸ்கரனிடம் காட்டினார்.

நவரத்தின கற்களை பார்த்துக் கொண்டிருந்த பாஸ்கரன் திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை செல்வத்தின் முகத்தில் வீசினார். மிளகாய் பொடி பட்டு செல்வம் கண் எரிச்சலால் துடித்தார். அப்போது நவரத்தின கற்களை கொள்ளையடித்து கொண்டு பாஸ்கரன் தப்பி ஓடினார்.

செல்வத்தின் நண்பர்கள் பாஸ்கரனை துரத்தினர். உடனே அவர்கள் மீதும் மிளகாய் பொடி வீசப்பட்டது.

பின்னர் சுதாரித்துக் கொண்ட செல்வம் பாஸ்கரனை தனது நண்பர்களுடன் விரட்டிச் சென்றார். நீண்ட தூரம் விரட்டிச் சென்றபிறகு பாஸ்கரன் பிடிபட்டார். அவரை மாம்பலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பிடிபட்ட பாஸ்கரன் மதுரை அருகே உள்ள மேலூரை சேர்ந்தவர். அவர் கைது செய்யப்பட்டார். அவர் கொள்ளையடித்து சென்ற நவரத்தின கற்களை மாம்பலம் போலீசார் மீட்டனர்.

பாஸ்கரன் மீது கொள்ளை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் மீது வேறு ஏதேனும் வழக்குகள் உள்ளதா? என்று மாம்பலம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Next Story