நடிகர் சங்க தேர்தல் விவகாரத்தில் கருத்து கூற விரும்பவில்லை - சரத்குமார் பேட்டி


நடிகர் சங்க தேர்தல் விவகாரத்தில் கருத்து கூற விரும்பவில்லை - சரத்குமார் பேட்டி
x
தினத்தந்தி 14 Jun 2019 11:30 PM GMT (Updated: 14 Jun 2019 8:30 PM GMT)

நடிகர் சங்க தேர்தல் விவகாரம் தொடர்பாக கருத்து கூற விரும்பவில்லை என்று சரத்குமார் கூறினார்.

மதுரை,

சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:–

உள்ளாட்சி தேர்தலில் ஆதரவு யாருக்கு என்பது குறித்து தேர்தல் அறிவித்த பின்னர் எனது நிலைப்பாட்டை தெரிவிக்கிறேன். தேர்தல் என்றால் இரு அணிகள் இருக்கத்தான் செய்யும்.

நான் நடிகர் சங்க உறுப்பினர் பொறுப்பில் இருந்தே நீக்கப்பட்டவன். எனவே நான் உறுப்பினர் இல்லை என்பதால் நடிகர் சங்க தேர்தல் விவகாரம் பற்றி கருத்து கூற விரும்பவில்லை. ஒரே அணியில் இருந்தவர்கள் தற்போது இரண்டு அணியாக பிரிந்துள்ளனர். நாங்கள் இருக்கும்போது இதுபோன்று இல்லை.

கடந்த முறை வென்ற அணியும் முன்பு இருந்த அணிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்துகளை பதிவு செய்துதான் தேர்தலை சந்தித்தார்கள். தற்போதுகூட புதிதாக உருவாகிய அணி, தற்போதைய நிர்வாகிகள் மேல் குறையைச் சொல்லி எதிரணியில் நிற்கிறார்கள். மொத்தத்தில் சங்கத்தின் செயல்பாடு சிறப்பாக இருக்க வேண்டும்.

சங்கக் கட்டிடம் கட்ட வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் இருக்கிறது. ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் சங்கம் உருவாக்கப்பட்டது. அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டால் சிறப்பாக இருக்கும் என்பது எனது கருத்து.

தற்போது ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்சினையை பொறுத்தவரை எதிர்க்கட்சி, ஆளும் கட்சி என்பது கிடையாது. இது மக்களின் பிரச்சினை. அனைவரும் ஒன்றுசேர்ந்து அதனை எப்படி நிவர்த்தி செய்ய வேண்டும், எதிர்கொள்ள வேண்டும் என்று சிந்திக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story