நாகையில் லாரி ஒர்க்‌ஷாப்பில் பயங்கர தீவிபத்து ரூ.20 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்


நாகையில் லாரி ஒர்க்‌ஷாப்பில் பயங்கர தீவிபத்து ரூ.20 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 15 Jun 2019 11:00 PM GMT (Updated: 15 Jun 2019 6:53 PM GMT)

நாகையில், லாரி ஒர்க்‌ஷாப்பில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் ரூ. 20 லட்சம் பொருட்கள் எரிந்து நாசமானது.

நாகப்பட்டினம்,

நாகை மஞ்சைக் கொல்லையை சேர்ந்தவர் சரவணன்(வயது 50). இவர், புத்தூரில் இருந்து வேளாங்கண்ணிக்கு செல்லும் சாலையில் ரெயில்வே கேட் அருகே உள்ள கீழ அந்தணப்பேட்டையில் லாரி பழுது நீக்கும் ஒர்க்‌ஷாப் வைத்து நடத்தி வருகிறார். இந்த ஒர்க்‌ஷாப்பில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் தங்களது லாரிகளை புதுப்பித்தல், பழுது நீக்குதல் உள்ளிட்ட வேலைகளுக்காக கொண்டு வந்து விட்டு உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று மதியம் சரவணன் மற்றும் அவருடன் 3 தொழிலாளர்கள் லாரிகளில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக வெல்டிங் மெஷினில் தீப்பிடித்தது. இந்த தீ அருகில் கிடந்த லாரி டயர்களிலும் பிடித்து எரிந்தது. அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ பரவி கடைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த டயர்களிலும் பிடித்தது.

இந்த நிலையில் ஒர்க்‌ஷாப்பில் பழுது நீக்குவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு லாரியின் டீசல் டேங்க் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

இதனால் மேலும் தீ கட்டுக்கடங்காமல் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் நாகை, வேளாங்கண்ணி ஆகிய இடங்களில் இருந்து 3 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன. நாகை தீயணைப்பு நிலைய அலுவலர் சத்தியகீர்த்தி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

ஆனாலும் இந்த தீவிபத்தில் லாரிகள், ஒர்க்‌ஷாப்பில் உள்ள வெல்டிங் மெஷின்கள், கியாஸ் கட்டிங் மெஷின்கள் உள்ளிட்ட தளவாட பொருட்கள் எரிந்து சாம்பலானது. சேத மதிப்பு ரூ. 20 லட்சம் என்று கூறப்படுகிறது. இது குறித்து நாகை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த தீவிபத்தால் வேளாங்கண்ணியில் இருந்து புத்தூர் செல்லும் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story