புவனகிரி அருகே, தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு - 2 பெண்கள் கைது


புவனகிரி அருகே, தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு - 2 பெண்கள் கைது
x
தினத்தந்தி 15 Jun 2019 10:45 PM GMT (Updated: 15 Jun 2019 8:05 PM GMT)

புவனகிரி அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டிய 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

கடலூர்,

புவனகிரி அருகே உள்ள ஆயிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவரது மகன் மாரியப்பன் (வயது 32), தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் மனைவி ராஜலட்சுமி(40), ராஜேந்திரன் மனைவி மீனாட்சி(36) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று ராஜலட்சுமியும், மீனாட்சியும் மாரியப்பன் வீட்டின் முன்பு நின்று கொண்டு ஆபாசமாக திட்டிக் கொண்டிருந்தனர். இதை பார்த்த மாரியப்பன், யாரை ஆபாசமாக திட்டுகிறீர்கள் என கேட்டுள்ளார்.

இதனால் ராஜலட்சுமி, மீனாட்சி ஆகிய 2 பேருக்கும் மாரியப்பனுக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மீனாட்சி தனது வீட்டுக்கு சென்று அரிவாளை எடுத்து வந்து மாரியப்பனை வெட்டினார். இதில் மாரியப்பன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் வழக்குப்பதிவு செய்து மீனாட்சி, ராஜலட்சுமி ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.

Next Story