நேபாளத்தை சேர்ந்த 2 பேர் மீது துப்பாக்கிச்சூடு - போலீஸ்காரர்களை கல்வீசி தாக்கியதால் அதிரடி நடவடிக்கை


நேபாளத்தை சேர்ந்த 2 பேர் மீது துப்பாக்கிச்சூடு - போலீஸ்காரர்களை கல்வீசி தாக்கியதால் அதிரடி நடவடிக்கை
x
தினத்தந்தி 15 Jun 2019 8:22 PM GMT (Updated: 15 Jun 2019 8:22 PM GMT)

பெங்களூருவில் திருட்டு வழக்கில் கைதாகி போலீஸ்காரர்களை கல்வீசி தாக்கிவிட்டு தப்பியோடிய நேபாளத்தை சேர்ந்த 2 பேர் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டனர்.

பெங்களூரு,

பெங்களூரு காடுகோடி போலீஸ் எல்லைக்குட்பட்ட எச்.பி.ஆர். லே-அவுட் 5-வது மெயின், 9-வது கிராஸ், 1-வது ஸ்டேஜில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் நுழைந்து யாரோ மர்மநபர்கள் தங்க நகைகள், ரொக்கப்பணத்தை திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் காடுகோடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடிவந்தனர்.

இந்த நிலையில் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் நேபாளத்தை சேர்ந்த நாம்ராஜ் பாஸ்கத் (வயது 23), சந்தோஷ் (38), கரன் பகதூர் சாகி (37) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் அனைவரும் அந்த அடுக்குமாடி கட்டிடத்தின் தரைப் பகுதியில் தங்கி அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடுகளில் வேலை செய்து வந்ததும், ஆள் இல்லாத வீட்டில் திருடியதும் தெரியவந்தது. கைதானவர்களிடம் இருந்து ரூ.17 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், ரூ.85 ஆயிரம் ரொக்கம், 5 கைக்கெடிகாரங்கள் உள்பட ரூ.20 லட்சம் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதற்கிடையே, கைதான 3 பேருக்கும் மருத்துவ பரிசோதனை செய்ய நேற்று உதவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காஜா நிஜாமுத்தீன் தலைமையிலான போலீசார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவ பரிசோதனை முடிவடைந்த நிலையில் திடீரென்று நாம்ராஜ் பாஸ்கத், சந்தோஷ் ஆகியோர் உதவி சப்-இன்ஸ்பெக்டர் காஜா நிஜாமுத்தீன், போலீஸ்காரர் குணசேகர் ஆகியோரை தள்ளிவிட்டு தப்பித்து ஓடினார்கள்.

இதுகுறித்து உடனடியாக போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜூவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக நாகராஜ் தலைமையிலான போலீசார் 2 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, சாம்புரா அருகே நாம்ராஜ் பாஸ்கத், சந்தோஷ் ஆகியோரை போலீசார் மடக்கினர். இந்த வேளையில் அவர்கள் 2 பேரும் போலீஸ்காரர்களை நோக்கி கல் வீசினார்கள். இதில் போலீஸ்காரர் முச்சண்டி காயம் அடைந்தார்.

இதனால் பாதுகாப்பு கருதி வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட இன்ஸ்பெக்டர் நாகராஜ், சரண் அடையும்படி 2 பேரிடமும் கூறினார். ஆனால், அவர்கள் சரண் அடையாமல் போலீஸ்காரர்களை தாக்கி தப்பியோடும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் 2 பேரையும் நோக்கி இன்ஸ்பெக்டர் நாகராஜ் துப்பாக்கியால் சுட்டார்.

இதில் நாம்ராஜ் பாஸ்கத், சந்தோஷ் ஆகியோரின் கால்களில் குண்டுகள் துளைத்தன. இதனால் சுருண்டு விழுந்த 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். குண்டு காயம் அடைந்த நாம்ராஜ் பாஸ்கத், சந்தோஷ் மற்றும் காயம் அடைந்த போலீஸ்காரர் முச்சண்டி ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story