வெள்ளகவுண்டன்பட்டியில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல் போக்குவரத்து பாதிப்பு


வெள்ளகவுண்டன்பட்டியில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 15 Jun 2019 11:00 PM GMT (Updated: 15 Jun 2019 8:26 PM GMT)

வெள்ளகவுண்டன்பட்டியில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வெள்ளியணை,

கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே உள்ள மூக்கணாங்குறிச்சி ஊராட்சி வெள்ளகவுண்டன்பட்டியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக ஊராட்சி சார்பில் அந்த பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து, அதிலிருந்து குடிநீர் எடுத்து மேல்நிலை நீர்த்தேக்கதொட்டியில் நிரப்பப்படும். பின்னர் குழாய்கள் மூலம் குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ஆழ்துளை கிணற்றின் நீர்மட்டம் குறைந்து போனதால், போதுமான அளவு குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.

இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடமும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடமும் புகார் அளித்ததின் பேரில், அதே பகுதியில் புதிதாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. ஆனால் அந்த புதிய ஆழ்துளை கிணற்றிலிருந்து குடிநீர் எடுக்க குழாய் பொருத்தும் பணிகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் அவதி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலிக்குடங்களுடன் கரூர்-ஈசநத்தம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்த தாந்தோன்றி வட்டார வளர்ச்சி அதிகாரி பாலச்சந்திரன், வெள்ளியணை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story