ரெயில்வே இணையதளத்தில் போலிகணக்கு தொடங்கி டிக்கெட் முறைகேடு; 2 பேருக்கு அபராதம்


ரெயில்வே இணையதளத்தில் போலிகணக்கு தொடங்கி டிக்கெட் முறைகேடு; 2 பேருக்கு அபராதம்
x
தினத்தந்தி 16 Jun 2019 11:00 PM GMT (Updated: 16 Jun 2019 6:57 PM GMT)

ரெயில்வே இணைய தளத்தில் போலி கணக்கு தொடங்கி தஞ்சையில் ரெயில்வே முன்பதிவு டிக்கெட் முறைகேட்டில் ஈடுபட்ட 2 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து கம்ப்யூட்டர், செல்போன் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தஞ்சாவூர்,

ரெயில்வே டிக்கெட்டுகள் முன்பதிவு செய்வதற்காக இந்திய ரெயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.டி.சி.) இணைய தளத்தை உருவாக்கி உள்ளது. இந்த இணையதளத்தில் கணக்கு வைத்திருக்கும் ஒரு நபர் மாதத்திற்கு 6 முறை மட்டுமே டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ய முடியும்.

ஆனால் தனியார் இன்டர்நெட் மையம் வைத்திருப்பவர்கள், ஏஜென்சி நிறுவனம் வைத்திருப்பவர்கள் இந்த இணைதயளத்தில் போலியாக பல்வேறு கணக்குகளை தொடங்கி அதிக அளவில் டிக்ட்ெ-டுகளை முன்பதிவு செய்து முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க நாடு முழுவதும் ஏஜென்சி நிறுவனங்கள், இன்டர்நெட் மையங்களில் திடீர் சோதனை நடத்தப்பட்டது.

டிக்கெட் முறைகேடு

ரெயில்வே ஐ.ஜி. பீரேந்திரகுமார் உத்தரவுப்படி திருச்சி ரெயில்வே பாதுகாப்பு படை மண்டல கமிஷனர் மொய்தீன் ஆலோசனையின் பேரில் தஞ்சை ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மாதப்பன், சிறப்பு புலனாய்வு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் காளிமுத்து மற்றும் போலீசார் தஞ்சை நகரில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது தஞ்சையில் பிரவுசிங் சென்டர் நடத்தி வரும் காத்திக்குமார் (வயது 27) மற்றும் திருவையாறை சேர்ந்த லாரன்ஸ் (36) ஆகிய 2 பேர் போலியாக பல்வேறு கணக்குகளை தொடங்கி டிக்கெட் முன்பதிவுசெய்து முறைகேடு செய்தது தெரிய வந்தது.

5 ஆயிரம் அபராதம்

இதையடுத்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் 2 பேரையும் தஞ்சை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-1ல் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட்டு 2 பேருக்கும் தலா 5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும் அவர்களிடம் இருந்து கம்ப்யூட்டர், லேப்டாப், பிரிண்டர், கீ போர்டு ஆகியவற்றையும் பறிமுதல் செய்து அரசுடமையாக்க வேண்டும் என உத்தரவிட்டார். கோர்ட்டு உத்தரவின் பேரில் அவர்கள் பயன்படுத்திய கம்ப்யூட்டர், லேப்டாப், பிரிண்டர், கீ போர்டு, செல்போன் ஆகிய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Next Story