ரத்ததானம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் கலெக்டர் பேச்சு


ரத்ததானம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் கலெக்டர் பேச்சு
x
தினத்தந்தி 16 Jun 2019 11:00 PM GMT (Updated: 16 Jun 2019 7:11 PM GMT)

ரத்ததானம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கலெக்டர் ஆனந்த் கூறினார்.

திருவாரூர்,

திருவாரூர் புதிய ரெயில் நிலையத்தில் இருந்து உலக ரத்த கொடையாளர்கள் தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் ஆனந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் ரெயில் நிலையத்தில் இருந்து தொடங்கி தெற்குவீதி வழியாக நகராட்சி அருகில் உள்ள வ.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை அடைந்தது.

அங்கு ரத்ததானம் குறித்து விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை கலெக்டர் தொடங்கி வைத்தார். பின்னர் கலெக்டர் ரத்தம் வழங்கி ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் கடந்த ஆண்டில் அதிக முறை ரத்த தானம் செய்தவர்களுக்கு பாராட்டு சான்றிழ்களும், பதக்கங்களையும் வழங்கினார்.

அப்போது கலெக்டர் பேசியதாவது:-

தானத்தில் சிறந்தது ரத்த தானம். பொதுமக்கள் இடையே ரத்த தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஊர்வலம் நடத்தப்பட்டுள்ளது. விபத்து காலத்தில் உயிரை காப்பது ரத்தம் தான். மேலும் ரத்த சோகை உள்ளிட்ட நோய்களினால் ரத்தத்தின் தேவையை அதிகமாக தேவைபடுகிறது. எனவே பொதுமக்கள் தாமாக முன்வந்து ரத்த தானம் செய்ய வேண்டும். ரத்த தானம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திட அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.

இதில் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முதல்வர் விஜயகுமார், சுகாதாரத்துறை இணை இயக்குனர் உமா, சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஸ்டான்லி மைக்கேல், தாசில்தார் நக்கீரன், துணை இயக்குனர் (காசநோய்) புகழ், மாவட்ட ரத்த பரிமாற்ற அலுவலர் பிரதியுஷாமெரவாலா, மாவட்ட மேற்பார்வையாளர் விஜி, பள்ளி தாளாளர் வடுகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story