டாஸ்மாக் கடைகள் அருகே மணல், புதர்களில் மறைத்து மது விற்பனை 2 பேர் கைது; 165 மது பாட்டில்கள் பறிமுதல்


டாஸ்மாக் கடைகள் அருகே மணல், புதர்களில் மறைத்து மது விற்பனை 2 பேர் கைது; 165 மது பாட்டில்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 16 Jun 2019 11:00 PM GMT (Updated: 16 Jun 2019 7:18 PM GMT)

தஞ்சை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் அருகே புதர், மணல் பகுதிகளில் மறைத்து மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 165 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் 153 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 24 கடைகளில் மட்டும் பார் செயல்பட்டு வருகின்றன. இந்த பார் அனுமதி பெற்று இயங்கி வருகின்றன. 129 கடைகளில் பார் செயல்படவில்லை. ஆனால் இந்த கடைகளின் அருகே திருட்டுத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருகிறது.

இங்கு காலை மற்றும் இரவு நேரங்களில் கூடுதல் விலையில் மது விற்பனை நடைபெற்று வருகின்றன. மதுக்கடைகளில் விற்கப்படும் விலையை விட ரூ.50 வரை கூடுதலாக மது விற்பனை நடைபெற்று வருகின்றன. இதனை வாங்குவதற்கும் அதிக அளவில் மதுப்பிரியர்கள் திரண்டு வருகிறார்கள்.

அதிகாரிகள் சோதனை

ஒரு சில இடங்களில் டாஸ்மாக்கடைகளின் அருகே அனுமதி பெறாமல் பார் போலவே இயங்கி வருகிறது. இதனால் அரசுக்கு வரும் வருவாய் இழப்பும் ஏற்படுகிறது. தஞ்சை அருகே 4 இடங்களில் மதுக் கடைகளின் அருகே நடைபெறும் மது விற்பனை குறித்து தஞ்சை கலால் உதவி ஆணையருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் உதவி ஆணையர் தவச்செல்வம், கோட்ட அலுவலர் வெங்கடேஸ்வரன், அதிகாரி அருள்சாமி மற்றும் ஊழியர்கள் நேற்று காலை அதிரடி சோதனை மேற்கொண்டனர். தஞ்சையை அடுத்த மணக்கரம்பை, வெண்ணாற்றங்கரை, செங்கிப்பட்டி, புதுக்குடி ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக்கடை அருகே ரகசியமாக நின்று கண்காணித்தனர்.

2 பேர் தப்பி ஓட்டம்

அப்போது ஒரு சில கடைகள் முன்பு புதர்களில் இருந்தும், ஒரு சில கடைகளில் மணல்மேடான பகுதிகளில் இருந்து மதுபாட்டில்கள் எடுத்து வந்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதை யடுத்து அதிகாரிகள் அங்கு சென்று மது விற்பனை செய்த செங்கிப்பட்டியை சேர்ந்த காமராஜ் (வயது 50), புதுக்குடியை சேர்ந்த ராபர்ட்கிளைவ் (45) ஆகிய 2 பேரை மடக்கிப்பிடித்தனர். மேலும் 2 பேர் தப்பி ஓடி விட்டனர். மேலும் புதர்கள் மற்றும் மணல்மேடான பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 165 குவார்ட்டர் மதுபாட்டில்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் பிடிப்பட்ட 2 பேரையும், மதுபாட்டில்களையும், கலால் அதிகாரிகள் தஞ்சை மதுவிலக்கு பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள். பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.20 ஆயிரம் ஆகும்.

Next Story