அதிகளவில் மழைபெய்ய பொதுமக்கள் மரக்கன்றுகள் நடுங்கள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வேண்டுகோள்


அதிகளவில் மழைபெய்ய பொதுமக்கள் மரக்கன்றுகள் நடுங்கள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 16 Jun 2019 11:00 PM GMT (Updated: 16 Jun 2019 8:19 PM GMT)

அதிகளவில் மழைபெய்ய பொதுமக்கள் மரக்கன்றுகள் நடுங்கள் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கரூர்,

கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்டத்தி்ன் கீழ் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கருப்பம்பாளையம் மற்றும் அப்பிபாளையம் கிராமங்களில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, மரக்கன்றுகளை நட்டு, நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

புவி வெப்பமயமாதலை தடுக்கும் வகையிலும், அதிக அளவில் மழை பெறுவதற்காகவும் அனைவரும் தங்களால் இயன்றவரை மரக்கன்றுகளை வளர்க்க முன்வரவேண்டும். மரம் வளர்ப்பதன் முக்கியத்துவத்தை எதிர்கால சந்ததியினருக்கும் எடுத்துரைக்க வேண்டும். அந்த வகையில் கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்டத்தி்ன் கீழ் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கருப்பம்பாளையம் பகுதியில் உள்ள அமராவதி ஆற்றங்கரையில் அரசன், புங்கை, வாகை, வேம்பு, ஆலமரம், பூவரசு, செண்பகப்பூ, நாவல், பிள்ளைமருது மற்றும் சரக்கொன்றை உள்ளிட்ட 250 மரக்கன்றுகளும், அப்பிபாளையம் ஊராட்சி பகுதியில் உள்ள அமராவதி ஆற்றங்கரையில் 300 மரக்கன்றுகளும் என மொத்தம் 550 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. இது எதிர்காலத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனளிக்கும் திட்டமாகும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதில் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. கீதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, ஊராட்சிகளுக்கான உதவி இயக்குனர் உமாசங்கர், தாந்தோணி வட்டார வளர்ச்சி அலுவலர் பாலச்சந்தர் மற்றும் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் குளித்தலை அருகே அய்யர்மலையில் உள்ள ரத்தினகிரீஸ்வரர் கோவில் பகுதியிலும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் (திருச்சி) சுதர்சன் தலைமை தாங்கி, கோவில் மலையடிவாரப் பகுதியில் மரக்கன்றுகள் நட்டு தொடங்கிவைத்தார். உதவி ஆணையர் (கரூர்) சூரியநாராயணன் முன்னிலை வகித்தார். இதில் குளித்தலை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மேலாளர் சுரேஷ்கென்னடி, ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் குமரவேல், ரத்தினகிரீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் ராமமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story