குலசேகரத்தில் இரட்டை குளத்தை தூர்வார வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் மனு


குலசேகரத்தில் இரட்டை குளத்தை தூர்வார வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் மனு
x
தினத்தந்தி 17 Jun 2019 10:45 PM GMT (Updated: 17 Jun 2019 5:30 PM GMT)

குலசேகரத்தில் உள்ள இரட்டை குளத்தை தூர்வார வேண்டும் என்று வலியுறுத்தி சட்ட உரிமை பாதுகாப்பு சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. அப்போது குமரி மாவட்ட சட்ட உரிமை பாதுகாப்பு சங்கத்தினர் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:–

குலசேகரம் பேரூராட்சியில் மாமூடு மற்றும் காவல்ஸ்தலம் ஆகிய ஊர்களுக்கு இடையே இரட்டைகுளம் உள்ளது. சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளத்து நீரை நம்பி ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயம் நடந்தது. ஆனால் தற்போது இந்த குளம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. குளத்தை சுற்றிலும் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டதால் குளமும் மெல்ல மெல்ல அழிக்கப்பட்டு வருகிறது.

மேலும் குளத்தில் இறங்குவதற்காக கட்டப்பட்டு இருந்த படிக்கட்டுகள் உடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் தங்களது கால்நடைகளை குளிப்பாட்ட முடியவில்லை. குளத்தை வி‌ஷ செடிகளும், பாசிகளும், ஆகாய தாமரைகளும் ஆக்கிரமித்து இருக்கின்றன. இதன் காரணமாக வி‌ஷ பூச்சிகளின் நடமாட்டம் அதிகரித்து இருக்கிறது.

எனவே குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேலும் குளத்தை தூர்வாரி மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story