செம்பனார்கோவில் அருகே சாலை அமைக்கக்கோரி மறியலில் ஈடுபட்ட 12 பேர் கைது


செம்பனார்கோவில் அருகே சாலை அமைக்கக்கோரி மறியலில் ஈடுபட்ட 12 பேர் கைது
x
தினத்தந்தி 17 Jun 2019 10:15 PM GMT (Updated: 17 Jun 2019 6:48 PM GMT)

செம்பனார் கோவில் அருகே சாலை அமைக்கக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 12 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கிருந்த சுவர் இடிக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

திருக்கடையூர்,

செம்பனார்கோவில் அருகே ஆக்கூர் முக்கூட்டில் ஈ.வே.ரா தெரு உள்ளது. இங்கு 10-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள், ஆறுமுகம் என்பவர் வைத்துள்ள ஓட்டலையொட்டி பட்டா இடத்தை வழியாக பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனர். இந்த வழி குறுகியதாக இருப்பதால் சிரமமாக உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். . இதனால் ஈ.வே.ரா தெருவிற்கு செல்லும் வழியை அகலப்படுத்தி சாலையாக அமைத்து தர வேண்டும் என்று அரசிடம் பல முறை கோரிக்கை விடுத்த னர். ஆனால், தற்போதுவரை எந்தநடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

சுவர் இடிப்பு

இந்த நிலையில் நேற்று முன்தினம் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பொக்லின் எந்திரத்துடன் சென்று சாலை அமைக்க தேவையான வழியை ஏற்படுத்த, அங்கு இடையூறாக இருந்த சுவரை இடித்து தள்ளினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ஆறுமுகம் என்பவர் செம்பனார்கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இந்த நிலையில் சாலை அமைத்து தர வலியுறுத்தி ஈ.வே.ரா தெரு பொதுமக்கள் ஆக்கூர் முக்கூட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த செம்பனார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார், அங்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட 12 பேரை கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story