கொல்கத்தாவில் மருத்துவர்கள் மீது தாக்குதல்: மாவட்டத்தில் 3 ஆயிரம் டாக்டர்கள் வேலைநிறுத்தம்


கொல்கத்தாவில் மருத்துவர்கள் மீது தாக்குதல்: மாவட்டத்தில் 3 ஆயிரம் டாக்டர்கள் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 17 Jun 2019 11:00 PM GMT (Updated: 17 Jun 2019 8:04 PM GMT)

கொல்கத்தாவில் மருத்துவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்து திருச்சி மாவட்டத்தில் 3 ஆயிரம் டாக்டர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவை புறக்கணித்தனர்.

திருச்சி,

மேற்கு வங்காளம் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள என்.ஆர்.எஸ். அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 2 பயிற்சி டாக்டர்கள் மீது கடந்த 10-ந் தேதி ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவத்தை கண்டித்து மேற்கு வங்காளத்தில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களுக்கு ஆதரவாக இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தன. அதன் ஒரு பகுதியாக நேற்று அனைத்து டாக்டர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக இந்திய மருத்துவ சங்கம் அறிவித்து இருந்தது.

அதன்படி திருச்சி மாவட்டத்தில் உள்ள 3 ஆயிரம் டாக்டர்கள் தங்கள் மருத்துவமனையில் உள்ள புறநோயாளிகள் சிகிச்சை பிரிவை புறக்கணித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவு வெறிச்சோடி காணப்பட்டது.

இதற்கிடையே இதுதொடர்பாக இந்திய மருத்துவ சங்கம் திருச்சி கிளை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பிறகு இந்திய மருத்துவ சங்க முன்னாள் தேசியத்தலைவர் டாக்டர் அஷ்ரப், துணைத்தலைவர் டாக்டர் குணசேகரன், திருச்சி கிளை தலைவர் குமுதினி ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சமீபகாலமாக மருத்துவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவி வருகிறது. ஆங்காங்கே மருத்துவர்கள் மீதும், மருத்துவமனையில் உள்ள உபகரணங்களை சேதப்படுத்தியும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இது கண்டனத்துக்குரியது.

மருத்துவர்களை பாதுகாக்க ஏற்கனவே தமிழக அரசு ஒரு சட்டம் இயற்றி உள்ளது. ஆனால் அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை. தற்போது மத்திய அரசு மருத்துவர்களை பாதுகாக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும். பொதுமக்களுக்கும் இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இருந்தால் தான் அவர்களால் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியும். திருச்சி மாவட்டத்தில் 850 மருத்துவமனைகள் உள்ளன. எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மருத்துவ சங்க உறுப்பினர்களான 1,500 டாக்டர்கள் உள்பட மாவட்டம் முழுவதும் 3 ஆயிரம் டாக்டர்கள் இன்று (நேற்று) காலை 6 மணி முதல் தொடர்ந்து 24 மணிநேரம் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவை புறக்கணித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதேபோல் திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்திலும் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க திருச்சி கிளை தலைவர் பிரபாகரன், சங்க செயலாளர் சதீஷ்குமார் ஆகியோர் தலைமையில் அரசு டாக்டர்கள் மற்றும் பயிற்சி டாக்டர்கள் 300 பேர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

அப்போது கொல்கத்தாவில் மருத்துவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும், மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்க தனி சட்டம் இயற்றக் கோரியும் கோஷங்களை எழுப்பினார்கள். தொடர்ந்து அரசு டாக்டர்களும், பயிற்சி டாக்டர்களும் கருப்புபட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

Next Story