கஞ்சா விற்ற 2 பேர் கைது


கஞ்சா விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 19 Jun 2019 10:00 PM GMT (Updated: 19 Jun 2019 8:06 PM GMT)

கஞ்சா விற்றதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பூந்தமல்லி,

குன்றத்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இரவு நேரத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து குன்றத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். வண்டலூர்– மீஞ்சூர் வெளி வட்ட சாலை குன்றத்தூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த 2 பேர் போலீசாரை பார்த்ததும் வேகமாக சென்றனர்.

இதையடுத்து போலீசார் அவர்களை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.

இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தபோது அவர்கள் கோடம்பாக்கத்தை சேர்ந்த சரத் என்ற சரத்குமார்(வயது26), கேளம்பாக்கத்தை சேர்ந்த சதீஷ் (22) என்பதும், இருவரும் கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து இரவு நேரங்களில் வடமாநில வாலிபர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா, ஒரு மோட்டார் சைக்கிள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது. சரத்குமார் மீது ஏற்கனவே 2 கொலை வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story