நாகர்கோவிலில் குடிநீர் தட்டுப்பாடு ஒரு வாரத்தில் சரிசெய்யப்படும் தளவாய்சுந்தரம் பேட்டி


நாகர்கோவிலில் குடிநீர் தட்டுப்பாடு ஒரு வாரத்தில் சரிசெய்யப்படும் தளவாய்சுந்தரம் பேட்டி
x
தினத்தந்தி 19 Jun 2019 10:45 PM GMT (Updated: 19 Jun 2019 8:33 PM GMT)

நாகர்கோவிலில் குடிநீர் தட்டுப்பாடு ஒரு வாரத்தில் சரிசெய்யப்படும் என்று தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் கூறினார்.

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் குடிநீர் பிரச்சினை தொடர்பாக எதிர் கட்சியினர் போராட்டம் நடத்தி உள்ளனர். முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2 நாட்களாக தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக ஆலோசனை நடத்தி கண்காணிப்பு குழு அமைத்து உள்ளார். மேலும் தண்ணீர் தட்டுப்பாடு இன்றி லாரிகள் மூலமாகவும், போர்வெல் மூலமாகவும் வழங்க வேண்டும் என்று மாநகராட்சிகள் மற்றும் நகராட்சி ஆணையர்களுக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

நாகர்கோவில் மாநகராட்சியில் 83 ஆயிரம் வீடுகள் உள்ளன. 2 லட்சத்து 80 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள். இங்கு சில வார்டுகளில் 2 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வழங்கப்படுகிறது. மேலும் சில வார்டுகளில் 3 நாட்களுக்கும், 7 நாட்களுக்கும் ஒரு முறை தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. நாகர்கோவிலில் குடிநீர் தட்டுப்பாடு ஒரு வாரத்தில் சரிசெய்யப்படும்.

அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ.250 கோடி செலவில் புத்தன் அணையில் இருந்து கிருஷ்ணன் கோவிலுக்கு இணைப்பு குழாய்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் இன்னும் 6 மாதங்களில் முடிவடைந்துவிடும். அதன்பிறகு புத்தன் அணையில் இருந்து தண்ணீர் வழங்கப்படும். மேலும் 33 நீர்தேக்க தொட்டிகள் வர உள்ளன.

குமரியில் பருவமழை தொடங்கி இருக்கிறது. நாகர்கோவில் மாநகராட்சியில் தான் 863 ஆழ்துளை கிணறு மூலமாக தண்ணீர் வழங்கப்படுகிறது. இதில் 800 ஆழ்துளை கிணறுகள் செயல்பாட்டில் உள்ளன. இவை தினமும் 7 முதல் 8 மணி நேரம் வரை இயக்கப்பட்டு வருகின்றன. 15 நாட்களுக்கு ஒரு முறை வெகு நேரம் தண்ணீர் வழங்குவதை தவிர்த்து தினமும் குறைந்த நேரமாவது தண்ணீர் வழங்க வேண்டும் என்று கூறுகிறீர்கள். இதுதொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story