குமரி மாவட்டத்தில் பாசனக் கால்வாய்களை தூர்வாராதது ஏன்? விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகாரி விளக்கம்


குமரி மாவட்டத்தில் பாசனக் கால்வாய்களை தூர்வாராதது ஏன்? விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகாரி விளக்கம்
x
தினத்தந்தி 20 Jun 2019 11:00 PM GMT (Updated: 20 Jun 2019 8:48 PM GMT)

குமரி மாவட்டத்தில் பாசனக் கால்வாய்களை தூர்வாராதது ஏன்? என்பது குறித்து விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகாரி விளக்கம் அளித்தார்.

நாகர்கோவில்,

குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நாஞ்சில் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (நீர்வள ஆதார அமைப்பு) வேத அருள்சேகர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) குணபாலன், மாவட்ட பாசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ, விவசாய சங்க பிரதிநிதிகள் புலவர் செல்லப்பா, பத்மதாஸ், செல்லப்பா, செண்பக சேகரபிள்ளை, முருகேசபிள்ளை, விஜி, அந்தோணி, சண்முகம்பிள்ளை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் குறைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து விவசாயிகள் தெரிவித்த விவரம் வருமாறு:-

அணை திறப்பு எப்போது?

ஆண்டுதோறும் கோடை காலத்தில் பாசனக்கால்வாய்கள் தூர்வாரப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு இதுவரை பாசனக் கால்வாய்களை தூர்வாராதது ஏன்?. தூர்வாரப்படாததால் அணைகள் திறக்கப்படும்போது தண்ணீர் சீராக செல்ல முடியாத நிலை ஏற்படும். வழக்கமாக ஜூன் மாதம் முதல் வாரத்தில் பேச்சிப்பாறை அணை பாசனத்துக்காக திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு இதுவரை திறக்கப்படவில்லை. எப்போது திறக்கப்படும்? சுசீந்திரம் மற்றும் தேரூர் குளங்கள் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு பிறகு பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இந்த குளங்களை வனத்துறை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. மேலும் இந்த குளங்களில் பழுதடைந்த ஷட்டர்களை சீரமைக்கக்கூட பொதுப்பணித்துறையை வனத்துறை அனுமதிப்பதில்லை. எனவே யாருடைய கட்டுப்பாட்டில் இந்த குளங்கள் உள்ளன? என்பதை அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும்.

மாத்தூர் தொட்டிப்பாலம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. சுற்றுலாப்பயணிகளுக்கான நுழைவுக்கட்டணம், வாகனங்களுக்கான பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதற்கான ஏலத்தை அந்தந்த ஊராட்சிகள் நடத்துகிறது. இவ்வாறு வருவாயை பெறும் ஊராட்சிகள் மாத்தூர் தொட்டிப்பாலத்தில் வளரும் செடி, கொடிகளைக்கூட அகற்றுவதில்லை. இதுதொடர்பாக கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாத்தூர் தொட்டிப்பாலம் அமைந்துள்ள பகுதியில் அந்த பாலத்தை கட்டிய காமராஜரின் சிலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நான்கு வழிச்சாலை பணிக்காக குளங்களில் மண் கொட்டுவதை நிறுத்தி பாலம் வேலையை விரைவுபடுத்த வேண்டும். சுங்கான்கடை குளத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டுமானம் அகற்றப்பட வேண்டும். குளங்களை தூர்வாரி விவசாயிகள் வண்டல் மண் எடுக்க கல்குளம், தோவாளை தாலுகாக்களில் தாசில்தார்களால் அனுமதி வழங்கப்படுவதில்லை. இதனால் ஆயிரக்கணக்கான மனுக்கள் நிலுவையில் இருந்து வருகின்றன.

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

விளக்கம்

பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வேத அருள்சேகர்:- வழக்கமாக குமரி மாவட்ட ஒப்பந்ததாரர்கள் தங்களது பதிவு புதுப்பிப்பை ஒவ்வொரு ஆண்டும் வருமானவரி தாக்கல் சான்று உள்ளிட்ட ஆவணங்களுடன் மாவட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அல்லது நெல்லையில் உள்ள கண்காணிப்பு பொறியாளரிடம் புதுப்பிப்பது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு சென்னையில் உள்ள முதன்மை தலைமைப் பொறியாளரிடம் வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து ஒப்பந்ததாரர்கள் வழக்கு தொடர்ந்தனர். இதனால் ஒன்றிரண்டு பேரைத்தவிர வேறு ஒப்பந்ததாரர்கள் யாரும் புதுப்பிக்கவில்லை. இதனால் பாசனக்கால்வாய்களை தூர்வார டெண்டர் விட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அணைகளில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் இம்மாதம் முதல் வாரத்தில் அணைகளை திறக்க முடியவில்லை. சில நாட்கள் மழை பெய்தால்தான் அணைகளை திறந்து தொடர்ந்து பாசனத்துக்கு தண்ணீர் கொடுக்க முடியும். அதனால் வருகிற 26-ந் தேதி அணைகளைத் திறக்க அரசுக்கு பரிந்துரை செய்து கடிதம் அனுப்ப உள்ளோம். அரசு உத்தரவிட்டதும் அணைகள் திறக்கப்படும் என்றார்.

வண்டல் மண் எடுக்க அனுமதி

கலெக்டர் பிரசாந்த் வடநேரே:- பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ள தேரூர் சரணாலயத்தின் மூலம் வனத்துறைக்கு என்ன அதிகாரம், பொதுப்பணித்துறைக்கு என்ன அதிகாரம் என்பதை பார்த்து அதிகாரத்தை பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாத்தூர் தொட்டிப்பாலத்தில் வர்ணம் பூசுவது, செடி, கொடிகளை அகற்றுவது தொடர்பாக உள்ளாட்சிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். குளங்களை தூர்வாரி விவசாயிகள் வண்டல் மண் எடுக்க நிலுவையில் உள்ள மனுக்களுக்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

முன்னதாக கடந்த நெல் அறுவடை பருவத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் நெல் கொள்முதல் செய்தமைக்காக விவசாயிகள் சார்பில் கலெக்டருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. கடந்த கூட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட 93 மனுக்களுக்கு அதிகாரிகளால் பதில்கள் தெரிவிக்கப்பட்டது. 

Next Story