காஞ்சீபுரம் அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம் எரிப்பு போலீசார் விசாரணை


காஞ்சீபுரம் அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம் எரிப்பு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 21 Jun 2019 9:45 PM GMT (Updated: 21 Jun 2019 8:39 PM GMT)

காஞ்சீபுரம் அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம் எரிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தை அடுத்த சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை கீழம்பி ஏரி அருகே ஆரியபெரும்பாக்கம்- கீழ் சிறுணை போகும் பாதையில் நேற்று அதிகாலை 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரது உடல் தீ வைத்து லேசான தீயுடன் எரிந்து கொண்டிருந்தது. அருகில் விறகு கட்டைகள் இருந்தன. டீ சர்ட், பேண்ட், அணிந்திருந்த அவர் காலில் ஷூ உடன் காணப்பட்டார்.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் பாலுச்செட்டிசத்திரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன், பாலுச்செட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன், தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசார் எரிந்து கொண்டிருந்த உடலை தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

அவர் சென்னையை சேர்ந்தவரா? அல்லது வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவரா? என்றும், அவரை கொலை செய்து மர்மநபர்கள் காஞ்சீபுரம் அருகே விறகு கட்டையுடன் தீ வைத்து ஏன் கொளுத்தினார்களா? என்றும் விசாரித்து வருகின்றனர்.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Next Story