பெண் தற்கொலைக்கு காரணமான சுய உதவி குழு தலைவி கைது ரூ.10 லட்சம் மோசடி செய்தது அம்பலம்


பெண் தற்கொலைக்கு காரணமான சுய உதவி குழு தலைவி கைது ரூ.10 லட்சம் மோசடி செய்தது அம்பலம்
x
தினத்தந்தி 22 Jun 2019 11:15 PM GMT (Updated: 22 Jun 2019 6:35 PM GMT)

திருச்சி அரியமங்கலத்தில் பெண் தற்கொலைக்கு காரணமான சுயஉதவி குழு தலைவியை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் ரூ.10 லட்சம் மோசடி செய்ததும் அம்பலம் ஆனது.

பொன்மலைப்பட்டி,

திருச்சி அரியமங்கலம் சீனிவாசன் நகர் பகுதியை சேர்ந்தவர் பூங்கொடி. இவர் அப்பகுதியில் உள்ள சுயஉதவி குழுவில் தலைவியாக உள்ளார். இந்த குழுவில் அதே பகுதியை சேர்ந்த பாஸ்கரின் மனைவி லட்சுமி என்பவர் உறுப்பினராக இருந்தார். இந்த நிலையில் லட்சுமியிடம், ‘உனது பெயரில் சுயஉதவி குழுவில் பணம் பெற்று கொடுத்தால், தவணையை நானே கட்டி விடுகிறேன். உனக்கு சில ஆயிரம் ரூபாய் கமிஷனாக தருகிறேன்’ என்று பூங்கொடி ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

இதனால், லட்சுமி, தனது கணவர் பாஸ்கருடன் இணைந்து 3 சுயஉதவி குழுக்களில் இணைந்து ரூ.1½ லட்சம் வாங்கி பூங்கொடிக்கு கொடுத்துள்ளார். ஓரிரு தவணையை சரியாக செலுத்தி வந்த பூங்கொடி பின்பு பணம் கட்ட மறுத்துள்ளார். இதனால் குழு நிறுவன அதிகாரிகள் லட்சுமியிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர்.

இதையடுத்து லட்சுமி, பூங்கொடியிடம் பலமுறை சென்று பணம் கேட்டும் அவர் கொடுக்க மறுத்துவிட்டார். மேலும், உன் பெயரில் தானே கடன் வாங்கி உள்ளாய், அதனால் நீயே தவணையை கட்டிக் கொள் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த லட்சுமி, தனது கணவருடன் கடந்த மாதம் 31-ந்தேதி தற்கொலை செய் வதற்காக விஷம் குடித்தார்.

இதில் மயங்கி விழுந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். கடந்த 3-ந் தேதி லட்சுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதை அறிந்த பூங்கொடி இரவோடு இரவாக வீட்டை காலி செய்துவிட்டு தலைமறைவானார். இதுபற்றி அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் பூங்கொடி, அந்த பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட சுயஉதவி குழுக்களுக்கு தலைவியாக இருந்துகொண்டு, பலரை உறுப்பினராக சேர்த்து, அவர்கள் மூலம் ரூ.10 லட்சத்துக்கும் மேல் பணம் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பூங்கொடியை பிடிக்க அரியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தரசு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் பூங்கொடியை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பொருட்களை எடுத்து செல்ல பூங்கொடி தனது வீட்டிற்கு வந்துள்ளார். இந்த தகவல் போலீசாருக்கு தெரியவரவே உடனடியாக அங்கு சென்று பூங்கொடியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story