அ.ம.மு.க. நிர்வாகிகளை அ.தி.மு.க.வினர் ஏமாற்றி தங்கள் பக்கம் இழுக்கின்றனர் டி.டி.வி. தினகரன் பேட்டி


அ.ம.மு.க. நிர்வாகிகளை அ.தி.மு.க.வினர் ஏமாற்றி தங்கள் பக்கம் இழுக்கின்றனர் டி.டி.வி. தினகரன் பேட்டி
x
தினத்தந்தி 22 Jun 2019 11:15 PM GMT (Updated: 22 Jun 2019 6:48 PM GMT)

அ.ம.மு.க. நிர்வாகிகளை அ.தி.மு.க.வினர் ஏமாற்றி தங்கள் பக்கம் இழுக்கின்றனர் என திருச்சியில் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.

திருச்சி,

தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்கு பிறகு கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணத்தால் தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இனியாவது தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்.

எங்கள் கட்சியை லெட்டர் பேடு கட்சி என்று கூறி விட்டு ஆட்களை இழுக்கின்றனர். எங்கள் கட்சி நிர்வாகிகளை அ.தி.மு.க.வினர் ஏமாற்றி தங்கள் பக்கம் இழுக்கின்றனர். கட்சியில் இருந்து சென்றவர்கள் திரும்பி வருவார்கள். ஜெயக்குமாரால் ஆர்.கே.நகர் தொகுதியில் டெபாசிட் கூட வாங்க முடியவில்லை. அவருடைய பேச்சுக்கெல்லாம் பதில் சொல்லி நான் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. உள்ளாட்சி தேர்தலில் எங்களுடைய நிலைப்பாடு தற்போது உள்ளதை போல தான். வேறு கட்சிகள் வந்தால் சேர்ந்து போட்டியிடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் திருச்சி அருகில் உள்ள வயலூரில் ஒரு திருமண மண்டபத்தில் நடந்த திருச்சி மாவட்ட அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் டி.டி.வி.தினகரன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தேர்தலில் தோல்வி அடைந்த போது எனக்கு வருத்தம் இருந்தது. ஆனால் அதற்கான காரணம் தெரிந்த பின் வருத்தப்படவில்லை. இந்த மின்னணு வாக்குப் பதிவு எந்திர முறையை மாற்ற வேண்டும். ஓட்டு சீட்டு முறை வேண்டும். நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் என்பது ஒரே கட்சி ஆட்சி அமைப்பதற்காக தான். மாநில கட்சிகளை இல்லாமல் செய்வதற்காக ஒரே தேர்தல், ஒரே தேசம் என்று கூறுகின்றனர்.

மோடி இருக்கிற வரை நாம் ஆட்சிக்கு வர முடியாது என ஒரு சிலர் கூறி வேறு கட்சிக்கு தாவுகின்றனர். ஒரு சிலர் குழம்பி போய் இருக்கிறார்கள். அவர்கள் மற்றவர்களையும் குழப்பி கொண்டிருக்கிறார்கள். அதுபோன்றவர்களிடம் ஒரு முடிவு எடுத்து இந்த கட்சி தேறும் என நினைத்தால் இருங்கள். இல்லையென்றால் வேலையை பார்த்து விட்டு செல்லுங்கள் என தெரிவித்துவிட்டேன்.

நான் வசிக்கிற பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் நமக்கு 14 ஓட்டுகள் தான் விழுந்துள்ளது. எனக்கு தெரிந்த நபர்களே 100 பேர் வரை வாக்களித்திருப்பார்கள். நம்முடைய வாக்குகள் எங்கே போனது என்று தான் கேள்வி. அனைவரும் சேர்ந்து போராடினால் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் முடிவு கிடைக்கும். உள்ளாட்சி தேர்தல், இடைத்தேர்தலிலும் இது போன்று செய்ய முடியாது.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் பா.ஜ.க.வுக்கு தானே சென்றிருக்க வேண்டும் என நீங்கள் கேட்பீர்கள். அதை கேட்காமல் இருப்பதற்காக தான் தி.மு.க.வுக்கு மாற்றிவிட்டனர். தி.மு.க. வாக்கு வித்தியாசத்தை பார்த்தாலே தெரியும். நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவோம். அதேபோல் வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலும் வரும். அதிலும் போட்டியிடுவோம். தண்ணீர் பிரச்சினையால் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாட்டார்கள்.

1,100 வாக்குச்சாவடிகளில் நமக்கு பூஜ்யம் விழுந்தது எப்படி? என்பதை முறையிட உள்ளோம். அதற்கான காரணத்தை ஆராய்ந்து வருகிறோம். சிலர் கட்சியை விட்டு சென்றார்கள் என்ற செய்தி வரும். அதை பற்றி கவலைப்படாதீர்கள். அ.ம.மு.க. வருங்காலத்தில் மாபெரும் வெற்றி பெறும். இரட்டை இலை சின்னத்தையும், அ.தி.மு.க.வையும் மீட்டெடுப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் திருச்சி மாவட்ட செயலாளர்கள் மனோகரன் (வடக்கு), சீனிவாசன் (மாநகர்), ராஜசேகரன் (தெற்கு), அமைப்பு செயலாளர் சாருபாலா தொண்டைமான் உள்பட கட்சி மாநில, மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மணிகண்டம் ஒன்றிய செயலாளர் பாக்கியராஜ் நன்றி கூறினார். 

Next Story