பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் நவம்பர் மாதத்தில் அரவை பணியை தொடங்க வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்


பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் நவம்பர் மாதத்தில் அரவை பணியை தொடங்க வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 22 Jun 2019 11:00 PM GMT (Updated: 22 Jun 2019 7:07 PM GMT)

பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் நவம்பர் மாதத்தில் அரவை பணியை தொடங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

மங்களமேடு,

பெரம்பலூர் சர்க்கரை ஆலையில், உயர் அதிகாரிகள் மற்றும் கரும்பு விவசாயிகள் சங்க பிரதிநிதிகளின் சிறப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு சர்க்கரை ஆலையின் தலைமை நிர்வாகி ஜெய்னுலாப்தீன் தலைமை தாங்கினார். சர்க்கரை கழக தலைமை கணக்கரும், நிறுவன செயலாளருமான ராஜகோபால், தலைமை பொறியாளர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் 2018-19ம் ஆண்டுக்கு வெட்டிய கரும்புக்கு கொடுக்க வேண்டிய தொகையில் ரூ.4 கோடியை ஜூன் மாதத்திலும், பாக்கி தொகையை ஜூலை மாதம் முதல் வாரத்திலும் வழங்குவது என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-

பெரம்பலூர் ஆலைக்கு அரசு மூலம் வழங்கப்பட்ட வழிவகை கடன் ரூ.116 கோடியை விவசாயிகள் பங்குத்தொகையில் சேர்க்க வேண்டும். பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் 1 லட்சத்து 30 ஆயிரம் குவிண்டால் சர்க்கரை இருப்பு உள்ளது. ஒரு நாளைக்கு 10 ஆயிரம் குவிண்டால் மட்டுமே விற்க வேண்டும் என்று மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளதால் இருப்பு உள்ள சர்க்கரையை விற்க முடியாத நிலையில் ஆலை நிர்வாகம் உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பாக்கி தொகையை வழங்குவது தாமதமாகிறது. மத்திய அரசு அரசுத்துறை ஆலைகளுக்கு விதித்துள்ள கட்டுப்பாட்டை நீக்க அதிகாரிகள் வலியுறுத்த வேண்டும்.

ஆலைக்குத் தேவையான உதிரி பாகங்களை உடனே வரவழைத்து ஆலை சீரமைப்பை செய்து முடித்து நவம்பர் மாதத்திலேயே அரவை பணியை தொடங்க வேண்டும். சர்க்கரை ஆலையில் இணைமின் உற்பத்தியில் ஒரு நாளைக்கு 11 மெகாவாட் உற்பத்தி செய்வதை 18 மெகாவாட்டாக மின் உற்பத்தியை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினர். கூட்டத்தில் பெரம்பலூர் சர்க்கரை ஆலை அதிகாரிகள், விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 

Next Story