செஞ்சி அருகே, தம்பதியை தாக்கி நகை பறிப்பு - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


செஞ்சி அருகே, தம்பதியை தாக்கி நகை பறிப்பு - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 22 Jun 2019 10:15 PM GMT (Updated: 22 Jun 2019 9:15 PM GMT)

செஞ்சி அருகே தம்பதியை தாக்கி நகையை பறித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

செஞ்சி,

செஞ்சி அருகே உள்ள வடபுத்தூரை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 45), விவசாயி. இவரது மனைவி நளினி(43). இவர்களது மகள் ரம்யா(13). நேற்று முன்தினம் இரவு வெங்கடேசன் தனது குடும்பத்தினருடன் வீட்டு மாடியில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் மர்மநபர்கள் 3 பேர் நள்ளிரவு நேரத்தில் வெங்கடேசன் வீட்டின் மாடியில் ஏறினர். பின்னர் அவர்கள் அங்கு தூங்கிக் கொண்டிருந்த வெங்கடேசனை இரும்பு கம்பியால் தாக்கினர். இதில் அவர் வலியால் அலறி துடித்தார். இந்த சத்தம் கேட்டு எழுந்த நளினி, மர்மநபர்களை பார்த்ததும் திருடன் திருடன் என கூச்சலிட்டார்.

இதில் ஆத்திரமடைந்த மர்மநபர்கள் நளினியையும் தாக்கினர். பின்னர் அவரது கழுத்தில் கிடந்த ½ பவுன் நகையை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதற்கிடையே சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த வெங்கடேசன், நளினி ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து நளினி கொடுத்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். தம்பதியை தாக்கி மர்மநபர்கள் நகையை பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story