மத்திய அரசின் ரூ.6 ஆயிரம் நிதிஉதவி பெற 30-ந்தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் விவசாயிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள்


மத்திய அரசின் ரூ.6 ஆயிரம் நிதிஉதவி பெற 30-ந்தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் விவசாயிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 23 Jun 2019 11:00 PM GMT (Updated: 23 Jun 2019 6:35 PM GMT)

மத்திய அரசின் ரூ.6 ஆயிரம் நிதி உதவி பெற வருகிற 30-ந்தேதிக்குள் விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெரம்பலூர்,

மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதத்தில் அறிமுகப்படுத்திய, பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி வழங்கும் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரத்தை ரூ.2 ஆயிரம் வீதம் மூன்று தவணைகளாக ஒவ்வொரு சிறு, குறு விவசாயிகள் குடும்பத்தை சார்ந்த ஏதேனும் ஒரு பட்டாதாரருக்கு வழங்கி வருகிறது.

மேற்கண்ட திட்டம் தொடர்ந்து நடப்பாண்டு (2019-20) முதல் சிறு, குறு விவசாய குடும்பம் மட்டும் அல்லாமல், அனைத்து விவசாயிகள் குடும்பத்திற்கும் இந்த சம்மான் நிதி வழங்கும் திட்டம் விரிவு படுத்தப்பட்டுள்ளது.

மேலும் 1-2-2019-க்கு முன்பு இறந்து போன தாய், தந்தையரின் வாரிசுதாரர்கள் தற்போது பட்டா மாற்றம் பெற்றிருந்தாலும், அதுபோன்ற அனைத்து (சிறு, குறு மற்றும் பெரிய) விவசாயிகளும், தங்கள் பெயர்களை கணக்கெடுக்கும் அலுவலர்களிடம் பதிவு செய்து பட்டா மாற்றம் செய்யும் பணி அனைத்து தாலுகா அலுவலகத்தில் வருகிற 30-ந்தேதிக்குள் பதிவு செய்து கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்ற கணக்கெடுப்பில், பெரிய விவசாயிகள் என்ற பிரிவின் கீழ் தகுதியற்றவர் பட்டியலில் நிறுத்தி வைக்கப்பட்ட விவசாயிகள் தற்போது, கணக்கெடுக்கும் அலுவலர்களிடம் தங்கள் பெயர்களை உடனடியாக பதிவுசெய்து பயன்பெறலாம்.

சென்ற வருடம் கணக்கெடுக்கும் பட்டியலில் பதிவேற்றம் செய்தவர்கள், வங்கி கணக்கு எண், வங்கியின் பெயர் போன்ற காரணங்களுக்காக விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா ஆகாமல் நிலுவையில் உள்ளவர்கள், சரியான ஆவணங்களை கிராம நிர்வாக அதிகாரிகளிடம் கொடுத்து சம்மான் நிதி இணையதளத்தில் பதிவேற்றம் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். எனவே இந்த அறிய வாய்ப்பினை பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்த தகவலை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.

Next Story