மாநகராட்சி பகுதியில் குடிநீர் வினியோகத்தை கண்காணிக்க 8 சிறப்பு குழுக்கள் அமைப்பு


மாநகராட்சி பகுதியில் குடிநீர் வினியோகத்தை கண்காணிக்க 8 சிறப்பு குழுக்கள் அமைப்பு
x
தினத்தந்தி 23 Jun 2019 10:15 PM GMT (Updated: 23 Jun 2019 8:58 PM GMT)

சேலம் மாநகராட்சி பகுதியில் குடிநீர் வினியோகத்தை கண்காணிக்க 8 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

சேலம்,

மேட்டூர் அணையில் இருந்து தனி குடிநீர் திட்டத்தின் மூலம் சேலம் மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும் உள்ள 56 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி ஆகிய 4 மண்டலங்களுக்கு உட்பட்ட 60 வார்டுகளிலும் குடிநீர் வினியோகத்தை கண்காணிப்பதற்காக ஒவ்வொரு மண்டலத்திற்கும் 2 குழுக்கள் வீதம் 8 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. உதவி ஆணையாளர், உதவி செயற்பொறியாளர் தலைமையில் உதவி பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், பொருத்துனர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் ஆகியோர் இதில் இடம்பெற்று உள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சேலம் மாநகராட்சி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கண்காணிப்பு குழுவினர் தினமும் குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் இருந்து எத்தனை நாட்களுக்கு ஒருமுறை, எத்தனை மணி நேரம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. குடிநீரில் குளோரின் அளவினை சரிபார்த்தல், ஆழ்துளை கிணறுகளில் உள்ள மோட்டார்களில் ஏற்படும் பழுதுகளை சரி செய்தல், குடிநீர் பகிர்மான குழாய்களில் நீர் கசிவுகள் ஏற்பட்டால் உடனடியாக சரி செய்திடும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்வார்கள்.

சட்ட விரோதமான முறையில் மின்மோட்டார்கள் மூலம் குடிநீர் இணைப்புகளில் குடிநீர் உறிஞ்சுவோர்களை கண்டறிந்து அபராதம் வசூலித்து நடவடிக்கை எடுப்பார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story