தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் பேச அனுமதிக்கவில்லை - தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு


தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் பேச அனுமதிக்கவில்லை - தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 23 Jun 2019 11:30 PM GMT (Updated: 23 Jun 2019 9:17 PM GMT)

தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் பேச அனுமதிக்கவில்லை என்று தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விருத்தாசலம்,

விருத்தாசலத்தில் நடந்த திருமண விழாவில் பங்கேற்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. வந்திருந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

தமிழகத்தில் தற்போது குடிநீர் தட்டுப்பாடு பெரும் பிரச்சினையாக உருவாகியுள்ளது. சென்னையில் வசிக்கும் மக்கள் குடிநீருக்காக அல்லல் படுகிறார்கள். குடிநீர் பிரச்சினைக்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத தமிழக அரசு தான் முழு பொறுப்பேற்க வேண்டும். குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசுக்கு கூடுதல் பொறுப்பு இருக்கிறது.

கிருஷ்ணா நதிநீர் திட்டத்தின்படி தமிழகத்திற்கு தர வேண்டிய, தண்ணீரை ஆந்திர அரசு வழங்கவில்லை. அதுபோல், ஜூன் மாதத்திற்குள் திறந்து விடவேண்டிய காவிரி நீரும் திறக்கப்படவில்லை. எனவே கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து பாசனம் மற்றும் குடிநீருக்கு வழங்க வேண்டிய தண்ணீரை முழுமையாக பெற்றுத்தர மத்திய அரசு முன்வர வேண்டும்.

தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் பேச அனுமதிக்கவில்லை. நான் பேசுவதற்கு எழுந்தபோது, கர்நாடக பா.ஜ.க. எம்.பி.க்கள் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர். மத்திய அரசு தமிழர்களுக்கு விரோதமான அரசு என்பதை மறுபடியும் உறுதிப்படுத்தி கொண்டிருக்கிறார்கள். இருப்பினும் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்க வேண்டிய நிலையில் தான் நாம் இருக்கிறோம்.

எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத மாநில அரசை கண்டிக்கிற வேளையில், தமிழகத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண மத்திய அரசு முன்வர வேண்டும். இதற்காக மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

ஹைட்ரோ கார்பன் திட்டங்களை நடைமுறைப்படுத்தினால், தமிழகம் கடும் குடிநீர் பிரச்சினைக்கு ஆளாகும், விவசாயம் பெரிதும் பாதிக்கப்படும். அடுத்த 10 ஆண்டுகளில் தமிழகத்தின் டெல்டா, கடலோர மாவட்டங்கள் பாலைவனமாகும். எனவே, இந்த திட்டத்தை முழுமையாக கைவிடக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்பட தி.மு.க. சார்பிலான மதசார்பற்ற கூட்டணி கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதனை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.

நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனம் சுரங்க விரிவாக்க பணிக்காக 400-க்கும் மேற்பட்ட குடிசைகளை அப்புறப்படுத்தியும், அவர்களுக்கு மாற்று இடம் வழங்க முன்வரவில்லை. இது என்.எல்.சி. நிர்வாகத்தின் சர்வாதிகாரத்தை காட்டுகிறது. இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story