இந்திய குடியுரிமை வழங்க கோரி ராயனூர் இலங்கை அகதிகள் கலெக்டரிடம் மனு


இந்திய குடியுரிமை வழங்க கோரி ராயனூர் இலங்கை அகதிகள் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 24 Jun 2019 11:00 PM GMT (Updated: 24 Jun 2019 8:23 PM GMT)

கரூரில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க கோரி ராயனூர் இலங்கை அகதிகள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

கரூர்,

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டா அன்பழகன் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று கொண்டார்.

கரூர் ராயனூரில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வரும் மக்கள் மனு கொடுத்தனர். அதில், நாங்கள் கடந்த 30 ஆண்டுகளாக அகதிகளாக முகாமில் வசித்து வருகிறோம். எங்களுக்கு மத்திய-மாநில அரசுகள் பல்வேறு உதவிகளை வழங்கி வந்த போதிலும், அகதிகளாக இருப்பது மனதளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எங்களது குழந்தைகள் இந்தியாவில் பிறந்து வளர்ந்து, அவர்களுக்கும் திருமணமாகி உள்ளது. எனினும் அவர்களால் அரசு வேலைக்கு செல்வதற்கான போட்டி தேர்வுகளில் கலந்து கொள்ள முடியவில்லை. எங்களது மூதாதையர்கள் இந்தியாவில் இருந்து வறுமையின் காரணமாக பஞ்சம் பிழைப்பதற்காக இலங்கைக்கு தோட்டத்தொழில் செய்ய சென்றனர். எனவே நாங்கள் இந்திய வம்சாவழியினர் தான். இதையடுத்து இந்திய குடியுரிமை வழங்கிட பரிந்துரை செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.

க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோடந்தூர், மூலத்துறை, வேட்டுவபாளையம், கரியம்மாபுதூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து மனு அளித்தனர். அதில், கரியம்மாபுதூர் அருகே கல்குவாரி மற்றும் கிரஷர் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. அது அமைக்கப்பட்டால், பாறைகளை பிளப்பதற்கு வைக்கப்படும் வெடிகளால் குடியிருப்புகளில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் வெடிமருந்து துகள்கள் கிணறு உள்ளிட்ட நீர்நிலைகளில் பரவவும் வாய்ப்புள்ளதால், விவசாயம் பாதிப்படையக்கூடும். எனவே கல்குவாரி மற்றும் கிரஷர் அமைப்பதை கைவிட வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.

கரூர் மாவட்டத்தில் மாட்டு வண்டி தொழிலாளர்களின் நலன் கருதி கட்டுமான தொழிலுக்காகவும், உள்ளூர் தேவைக்காகவும் மணல் அள்ள அனுமதி வழங்கிட வேண்டும். மாறாக லாரிகளில் மணல் கடத்துவோர் மீது உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என பா.ஜ.க.வின் மாவட்ட இளைஞர்அணி செயலாளர் திருநாவுக்கரசுராஜா உள்ளிட்டோர் மனு கொடுத்தனர்.

சிவகங்கை மாவட்டம் கே.நெடுவயலை சேர்ந்த ரேவதிமாலா (வயது 25). என்பவர் தனது தந்தையுடன் வந்து கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். அப்போது, அரவக்குறிச்சியை சேர்ந்த ஒருவருக்கும், எனக்கும் கடந்த 2017-ல் திருமணம் நடந்தது. இந்த நிலையில் வரதட்சணை கேட்டு என்னை கொடுமைப்படுத்தியதால் பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டேன். எனது பெண் குழந்தையை அவர்கள் வைத்து கொண்டனர். மேலும் எனது கணவர் வேறு திருமணம் செய்ய முயற்சிக்கிறார். எனவே எனது குழந்தையை மீட்டுத்தர வேண்டும் என்று கூறியிருந்தார்.

சாமானிய மக்கள் நலக்கட்சியின் மாவட்ட செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் அளித்த மனுவில், கரூர் அமராவதி ஆற்றின் கிளை வாய்க்காலில் பெரியாண்டாங்கோவில் பகுதியில் தொடங்கி பாலம்மாள்புரம் வரை செல்லும் நீர்வழிப்பாதை புதர்மண்டி காட்சியளிக்கிறது. மேலும் அதில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. எனவே அதனை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். கரூர் கோவை ரோட்டில் மருத்துவமனை, வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவை இருப்பதால் மக்கள் நெருக்கம் அங்கு அதிகம். இந்த நிலையில் அங்கு செயல்படும் டாஸ்மாக் கடையில் மதுகுடித்து விட்டு வருவோரால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே அந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் கூறினார்.

இதில், மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், மாவட்ட கலெக்டரின் நேர்முகஉதவியாளர் (பொது) செல்வசுரபி, சமூகபாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் கண்ணன், மாவட்ட பிற்படுத்தப்பட்ட நலத்துறை அதிகாரி கணேஷ் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மொத்தம் 382 மனுக்கள் பெறப்பட்டன. இந்த கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக ஒரு பயனாளிக்கு தாங்கு கட்டைகளும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பாக ஒரு பயனாளிக்கு சலவைப் பெட்டியையும் கலெக்டர் வழங்கினார். முன்னதாக கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக “முதியோர் கொடுஞ் செயல் எதிர்ப்பு தின உறுதிமொழியை” மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமையில் அரசு அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் எடுத்துக்கொண்டனர்.

Next Story