நடத்தையில் சந்தேகப்பட்டு 2-வது மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது


நடத்தையில் சந்தேகப்பட்டு 2-வது மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது
x
தினத்தந்தி 25 Jun 2019 12:00 AM GMT (Updated: 25 Jun 2019 5:42 AM GMT)

நடத்தையில் சந்தேகப்பட்டு 2-வது மனைவியின் கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது செய்யப்பட்டார்.

மும்பை,

மும்பை காந்திவிலி மேற்கு பகுதியில் உள்ள கணேஷ் நகரை சேர்ந்தவர் இமாம் பஸ்திவாலா(வயது29). கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். இவருக்கு 2 மனைவிகளும், 6 குழந்தைகளும் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் 2-வது மனைவியான பகின் நடத்தையில் இமாம் பஸ்திவாலா சந்தேகப்பட்டார்.

இது தொடர்பாக நேற்றுமுன்தினம் கணவன், மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த அவர் மனைவி என்றும் பாராமல் கழுத்தை நெரித்தார்.

இதில், பகின் மூச்சுச்திணறி மயங்கி கீழே விழுந்தார். மனைவி மயங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் பகின் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவலறிந்து வந்த காந்திவிலி போலீசார் பகின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இமாம் பஸ்திவாலாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story