நாகையில், தனியார் மருத்துவமனையில் பிரசவத்தின்போது பெண் திடீர் சாவு உறவினர்கள் முற்றுகை


நாகையில், தனியார் மருத்துவமனையில் பிரசவத்தின்போது பெண் திடீர் சாவு உறவினர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 25 Jun 2019 11:30 PM GMT (Updated: 25 Jun 2019 6:51 PM GMT)

நாகையில், தனியார் மருத்துவமனையில் பிரசவத்தின்போது பெண் திடீரென்று இறந்தார். அவரது உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதுடன் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதில் மருத்துவமனையில் இருந்த கதவின் கண்ணாடி உடைந்தது.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டம் தலைஞாயிறு வலம்புரி ரோடு பகுதியை சேர்ந்தவர் நூருல் அமீன். இவரது மனைவி பாத்திமா(வயது 30). இவர்களுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் பாத்திமா மீண்டும் கர்ப்பம் அடைந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பாத்திமாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து கடந்த 23-ந் தேதி நாகை அபிராமி அம்மன் சன்னதி தெருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்த்தனர்.

அங்கு நேற்று முன்தினம் காலையில் அறுவை சிகிச்சை மூலம் பாத்திமாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் பாத்திமா கண் விழிக்கவில்லை. ரத்தம் குறைவாக இருப்பதால் அவர் மயக்க நிலையில் இருப்பதாக அங்கு பணியில் இருந்த டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். நீண்ட நேரமாக பாத்திமா மயக்கத்தில் இருந்து கண் விழிக்காததால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள், டாக்டர்களிடம் சென்று பாத்திமாவை பார்க்க வேண்டும் என்று கேட்டனர்.

ஆனாலும் அவரை பார்க்க டாக்டர்கள் அனுமதிக்காமல் காலம் கடத்தி வந்தனர். இந்த நிலையில் நீண்ட நேரத்துக்கு பிறகு இரவு உடல் நிலை மோசமானதால் பாத்திமா சிகிச்சை பலனின்றி இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து ஆத்திரம் அடைந்த பாத்திமாவின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர்.

இதற்கிடையில் பாத்திமா இறந்த தகவல் அறிந்து தலைஞாயிறு கிராமத்தை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் அந்த தனியார் மருத்துவமனைக்கு திரண்டு வந்தனர். தவறான சிகிச்சையால்தான் பாத்திமா இறந்து விட்டதாக கூறி மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் மருத்துவமனையின் மீது கற்களை வீசினர். இதில் மருத்துவமனையில் இருந்த கதவின் கண்ணாடி உடைந்தது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்றம் நிலவியது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு உதவி போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் தலைமையில் ஏராளமான போலீசார் விரைந்து வந்தனர். தொடர்ந்து பாத்திமாவின் உறவினர்களிடம் உதவி போலீஸ் சூப்பிரண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பாத்திமாவின் உறவினர்கள், கிராமத்தினர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Next Story