தஞ்சை பெரியகோவிலில் வராகி அம்மன் அபிஷேக தண்ணீர் தேங்காமல் இருக்க தொட்டி கட்டுமான பணிகள் தீவிரம்


தஞ்சை பெரியகோவிலில் வராகி அம்மன் அபிஷேக தண்ணீர் தேங்காமல் இருக்க தொட்டி கட்டுமான பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 25 Jun 2019 10:45 PM GMT (Updated: 25 Jun 2019 7:18 PM GMT)

தஞ்சை பெரியகோவிலில் வராகி அம்மன் அபிஷேக தண்ணீர் தேங்காமல் இருக்க தொட்டி கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூர்,

தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு, உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. இந்த கோவில் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

தஞ்சை பெரியகோவிலில் விரைவில் கும்பாபிசேகம் நடத்துவதற்காக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் முதல் கட்டமாக தஞ்சை பெரியகோவில் ராஜராஜன்கோபுரம், கேரளாந்தகன் கோபுரத்துக்கு இடையேயான புல்தரை சீரமைக்கப்பட்டு புதிய புல்தரை அமைக்கப்பட்டது.

மேலும் பெரியகோவில் விமான கோபுரத்தின் இருபுறமும் உள்ள தரைதளத்தில் உள்ள செங்கல்கள் சேதம் அடைந்து தண்ணீர் தேங்கி காணப்பட்டது. இதனால் அதுவும் அகற்றப்பட்டு புதிதாக செங்கல்கள் அமைக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து கேரளாந்தகன் கோபுரம் ரசாயன கலவை மூலம் சுத்தம் செய்யப்பட்டது.

தற்போது விமான கோபுரம் சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக கோபுரத்தில் சாரம் அமைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் திருச்சுற்று மண்டபத்தில் உள்ள லிங்கங்களை யாரும் தொடாத வகையில் தடுப்புக்கட்டைகள் அமைக்கப்பட்டன. வடக்கு திருச்சுற்று மண்டபத்தில் உள்ள கதவு சீரமைக்கப்பட்டது.

இவ்வாறு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதே போல் தஞ்சை பெரியகோவில் வளாகத்தில் உள்ளது வராகி அம்மன் சன்னதி. இந்த அம்மனுக்கு ஆண்டு தோறும் ஆஷாடநவராத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்து ஆண்டு ஆஷாட நவராத்திரி விழா வருகிற 1-ந்தேதி முதல் கொண்டாடப்படுகிறது.

வராகி அம்மனுக்கு தினமும் காலை 8 மணிக்குள் அபிஷேகம் நடத்தப்படும். பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படும். இவ்வாறு செய்யப்படும் அபிஷேக தண்ணீர் கோவிலின் அருகே சென்று அங்கு அமைக்கப்பட்டு இருந்த தொட்டிக்குள் செல்லும். ஆனால் இந்த தொட்டியில் பழுது ஏற்பட்டதையடுத்து தண்ணீர் கோவில் அருகே தேங்கியது. இது நாள் கணக்கில் தேங்கி நின்றதால் துர்நாற்றமும் வீசியது.

இதையடுத்து அந்த தொட்டியை சரி செய்யும் பணி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அந்த தொட்டி ஏற்கனவே கற்களை கொண்டு கட்டப்பட்டு இருந்தது. தற்போது அது அகற்றப்பட்டு செங்கல்களை கொண்டு கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக வட்ட வடிவில் 6 அடி ஆழத்திற்கு குழி தோண்டப்பட்டுள்ளது. ஏற்கனவே 1 தொட்டி இருந்த இடத்தில் தற்போது 2 தொட்டிகள் கட்டப்பட்டு வருகின்றன. அபிஷேக தண்ணீர் இந்த தொட்டிக்குள் விழுந்து பூமிக்குள் செல்லும் வகையில் தொட்டி அமைக்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

Next Story