தார்ச்சாலை அமைக்கக்கோரி யூனியன் அலுவலகத்திற்கு கிராம மக்கள் பூட்டுபோடும் போராட்டம்


தார்ச்சாலை அமைக்கக்கோரி யூனியன் அலுவலகத்திற்கு கிராம மக்கள் பூட்டுபோடும் போராட்டம்
x
தினத்தந்தி 26 Jun 2019 11:15 PM GMT (Updated: 26 Jun 2019 9:22 PM GMT)

கல்லல் – குருந்தம்பட்டு சாலையை தார்ச்சாலையாக மாற்றக்கோரி கிராம மக்கள் சார்பில் யூனியன் அலுவலகத்தை பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

கல்லல்,

காரைக்குடி அருகே உள்ள கல்லல் யூனியனுக்குட்பட்டது குருந்தம்பட்டு கிராமம். இந்த கிராமத்தில் இருந்து கல்லல் செல்லும் சாலை நீண்டகாலமாக மண்சாலையாகவும், குண்டும், குழியுமாகவும் உள்ளதால் இப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்து வந்தனர். இந்நிலையில் இந்த மண்சாலையை தார்ச்சாலையாக மாற்றித்தர வேண்டும் என்று இப்பகுதி கிராம மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று குருந்தம்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள கிராம மக்கள் 200–க்கும் மேற்பட்டவர்கள் நேற்று கல்லல் யூனியன் அலுவலகத்திற்கு பூட்டுடன் வந்து பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து அவர்களுடன் கல்லல் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராமன் மற்றும் கல்லல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சப்–இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராமன் இதுகுறித்து வருகிற 1–ந்தேதி காரைக்குடி தாசில்தார் பாலாஜி தலைமையில் சமதான பேச்சுவார்த்தை நடத்தி அதன் மூலம் விரைவில் தீர்வு காணப்படும். அதுவரை போராட்டத்தை கைவிடும்படி கூறினார். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் கூறியதாவது:– கல்லலில் இருந்து குருந்தம்பட்டு செல்லும் சாலை மிகவும் முக்கிய சாலையாக உள்ளது. இந்த சாலையை பயன்படுத்தி குருந்தம்பட்டு, ஆலம்பட்டு, வேப்பங்குளம், எஸ்.ஆர்.பட்டிணம், அமராவதிபுதூர், மூப்பன்திடல், கல்லுப்பட்டு, தேவகோட்டை ரஸ்தா மற்றும் காரைக்குடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை மிகவும் குறுகிய நிலையில் மண் சாலையாகவும், குண்டும், குழியுமாக காணப்படுவதால் தினந்தோறும் இதில் வாகனங்களில் செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவ–மாணவிகள், பெண்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

மேலும் தற்போது இந்த சாலையை புதுபிக்கும் வகையில் பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி இந்த சாலையின் இடையில் உள்ள செட்டியான் கண்மாய் பாலம், கொன்னகுளத்து கண்மாய் பாலம், ஆண்டூருணி கண்மாய் பாலம் ஆகிய 3 இடங்களில் உள்ள பாலங்களின் பெரிய குழாய்களை அகற்றி புதியதாக தரைப்பாலம் அமைக்க வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மாவட்ட கலெக்டரிடம் இதுகுறித்து முறையீடு செய்து தொடர் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story