தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.22 லட்சம் முறைகேடு தலைவர், செயலாளர் உள்பட 3 பேர் கைது


தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.22 லட்சம் முறைகேடு தலைவர், செயலாளர் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 27 Jun 2019 10:15 PM GMT (Updated: 27 Jun 2019 6:37 PM GMT)

பாபநாசம் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.22 லட்சம் முறைகேடு செய்தது தொடர்பாக தலைவர், செயலாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ளது தேவராயன்பேட்டை. இங்கு உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் போலி ஆவணங்கள் மூலம் நகையை அடகு வைத்து முறைகேடு நடப்பதாக கூட்டுறவு இணைப்பதிவாளருக்கு பல்வேறு புகார்கள் வந்தன. இதனையடுத்து அவர் ஆய்வு செய்ததில் அங்கு முறைகேடு நடந்து இருப்பது தெரிய வந்தது.

இந்த முறைகேடு தொடர்பாக கும்பகோணம் கூட்டுறவு சங்க துணைப்பதிவாளர் மாரீஸ்வரன், தஞ்சை மாவட்ட வணிக பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில், தேவராயன்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.22 லட்சம் வரை முறைகேடு நடந்திருப்பதாக கூறி இருந்தார்.

3 பேர் கைது

புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த முறைகேடு தொடர்பாக கூட்டுறவு கடன் சங்க செயலாளர் தஞ்சையை அடுத்த பிள்ளையார்பட்டியை சேர்ந்த மணிவண்ணன், தலைவர் தேவராயன்பேட்டையை சேர்ந்த சீனிவாசன், விற்பனையாளர் பாபநாசத்தை சேர்ந்த உலகநாதன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

பின்னர் கைதான 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story