3½ வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: கேபிள் டி.வி. ஆபரேட்டருக்கு 10 ஆண்டு ஜெயில் கோர்ட்டு தீர்ப்பு


3½ வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: கேபிள் டி.வி. ஆபரேட்டருக்கு 10 ஆண்டு ஜெயில் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 27 Jun 2019 10:15 PM GMT (Updated: 27 Jun 2019 8:24 PM GMT)

குமரியில் 3½ வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கேபிள் டி.வி. ஆபரேட்டருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நாகர்கோவில் மகிளா கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

நாகர்கோவில்,

கன்னியாகுமரி ஆரோக்கியபுரம் பகுதியை சேர்ந்தவர் சேவியர் (வயது 57), இவர், கேபிள் டி.வி. ஆபரேட்டராக இருந்ததால் இவரை கேபிள் சேவியர் என்றும் கூறுவர். இவர், கடந்த 16-5-2015 அன்று ஆரோக்கியபுரம் பகுதியில் ஒரு வீட்டில் டி.வி.யில் கேபிள் இணைப்பு கொடுத்தார்.

அங்கு 3½ வயது சிறுமி விளையாடி கொண்டிருந்தாள். இதனை கவனித்த சேவியர், மிட்டாய் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி அந்த சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

சேவியரின் பாலியல் தொல்லையால் அந்த சிறுமி அலறினாள். அவளது அலறல் சத்தம் கேட்டு சிறுமியின் தாயார் தனது வீட்டில் இருந்து ஓடி வந்தார். அப்போது சேவியர் வீட்டில் இருந்து சிறுமி அழுது கொண்டே வந்தாள். சிறுமி தனது தாயாரிடம் நடந்ததை சொன்னாள். இதைக்கேட்டு சிறுமியின் தாயார் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி சிறுமியின் தாயார், கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சேவியரை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு நாகர்கோவில் மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜாண் ஆர்.டி. சந்தோஷம் நேற்று தீர்ப்பு கூறினார்.

தீர்ப்பில், சேவியருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் மீனாட்சி ஆஜரானார்.

Next Story