பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவ, மாணவிகள் தர்ணா போராட்டம்


பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து  கல்லூரி மாணவ, மாணவிகள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 28 Jun 2019 10:15 PM GMT (Updated: 28 Jun 2019 5:30 PM GMT)

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் உள்ள பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.

திருப்பூர்,

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் மற்றும் தமிழகத்தின் கோவை மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெண் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்துள்ளனர். நாளுக்கு நாள் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இதன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் திருப்பூர் மாநகருக்குட்பட்ட பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளின் கூட்டமைப்பினர் நேற்று மாநகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.

ஆனால், போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர். அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், நேற்று காலையில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகள் கூடினார்கள். அவர்கள் தங்கள் கைகளில் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக்கொண்டு மாநகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில், பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் நபர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக தூக்குத்தண்டனை வழங்க வேண்டும் என்றும், ஆபாச வலைதளங்களை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும், பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் வகையிலான திரைப்படங்களை தடை செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பினார்கள். சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக இந்த தர்ணா போராட்டம் நடைபெற்றது.

இதையடுத்து அங்கு பாதுகாப்புக்காக நின்ற போலீசார் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபடுவதால் உடனடியாக போராட்டத்தை கைவிட்டு விட்டு கலைந்து செல்லும்படி மாணவர்களிடம் அறிவுறுத்தினார் கள். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story