நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கல்லூரி பாடத்திட்டம் தரம் உயர்த்தப்படும் நிலைக்குழு கூட்டத்தில் துணை வேந்தர் பிச்சுமணி தகவல்


நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கல்லூரி பாடத்திட்டம் தரம் உயர்த்தப்படும் நிலைக்குழு கூட்டத்தில் துணை வேந்தர் பிச்சுமணி தகவல்
x
தினத்தந்தி 28 Jun 2019 10:45 PM GMT (Updated: 28 Jun 2019 8:02 PM GMT)

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கல்லூரி பாடத்திட்டம் தரம் உயர்த்தப்படும் என்று நிலைக்குழு கூட்டத்தில் துணைவேந்தர் பிச்சுமணி கூறினார்.

நெல்லை,

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக 49-வது கல்விசார் நிலைக்குழு கூட்டம் நேற்று பல்கலைக்கழக கூட்ட அரங்கில் நடைபெற்றது. துணைவேந்தர் பிச்சுமணி தலைமை தாங்கினார். பதிவாளர் சந்தோஷ் பாபு முன்னிலை வகித்தார்.

இதில் பல்கலைக்கழக துறை தலைவர்கள், நிலைக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அப்போது பல்கலைக்கழகம் சார்பில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்போது கல்லூரி முதல்வர்கள் ஜான் கென்னடி, ஸ்டீபன் ஆகியோர் கூறுகையில், “கடந்த டிசம்பர் மாதம் இளநிலை, முதுநிலை பாடத்திட்ட குழு அமைக்கப்பட்டபோது பல்கலைக்கழகத்தில் உள்ள பேராசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டு உள்ளனர். வழக்கமாக இந்த குழுவில் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் மூத்த கல்லூரி முதல்வர், பேராசிரியர்களை தலைவர்களாக நியமிப்பது வழக்கம் ஆகும். எனவே, மீண்டும் கல்லூரி பேராசிரியர்களை பாடத்திட்டக்குழு தலைவர்களாக நியமிக்க வேண்டும். மாணவர்களுக்கு நேரடியாக பாடம் நடத்துபவர்கள் இந்த குழுவில் இருந்தால்தான் புதிய பாடங்கள் குறித்து திட்டமிடுவது சரியாக இருக்கும். சுயாட்சி கல்லூரிகளிடம் இருந்து பி.எச்.டி. ஆராய்ச்சி படிப்பை பல்கலைக்கழகமே எடுத்துக் கொள்வது தொடர்பாக அந்த கல்லூரி முதல்வர்களிடமும் ஆலோசனை நடத்தி முடிவு செய்ய வேண்டும்“ என்றனர். இதேபோல் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதம் நடைபெற்றது.

விவாதத்தின்போது உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துணைவேந்தர் பிச்சுமணி பதில் அளித்து பேசுகையில் கூறியதாவது:-

சுயாட்சி கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பாடம் மற்றும் தேர்வுகள் அந்த கல்லூரிகள் சார்பிலே நடத்தப்படுகிறது. அதே போல் பி.எச்.டி. ஆராய்ச்சி படிப்பும் நடத்துகிறார்கள். ஆனால் பி.எச்.டி. குறித்த அனைத்து பணிகளும் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் கொண்டு வந்தால் நல்லது. பி.எச்.டி. ஆராய்ச்சி பட்டத்தை பல்கலைக்கழகம்தான் வழங்குகிறது. எனவே, பி.எச்.டி. படிப்புக்கான ‘கோர்ஸ் ஒர்க்’ எனப்படும் ஆரம்ப எழுத்து தேர்வை பல்கலைக்கழகமே நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதனை வருகிற 1-ந்தேதி முதல் அமல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. முன்பு பி.எச்.டி. படிப்புக்கான குழு பல்கலைக்கழகத்தில் கிடையாது என்பதால் சுயாட்சி கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது பல்கலைக்கழகத்தில் அனைத்து கட்டமைப்புகளும் உருவாக்கப்பட்டு விட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் நியமிக்கப்பட்ட பாடத்திட்ட குழுவை கலைத்து விட்டு, புதிய குழு உருவாக்கப்படும். இதில் கல்லூரி பேராசிரியர்கள் சேர்க்கப்படுவார்கள்.

வழக்கமாக 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்படும். தற்போது பிளஸ்-1, பிளஸ்-2 பாடத்திட்டம் நீட் தேர்வு, போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் மேம்படுத்தப்பட்டு உள்ளது. அந்த பாடங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. இதையொட்டி கல்லூரி பாடத்திட்டமும் தரம் உயர்த்தப்படும். புதிய பாடத்திட்டம் வருகிற 2020-21-ம் கல்வி ஆண்டு அமல்படுத்தப்படும். இதுதவிர மாணவர்கள் 3 ஆண்டு படிப்பில் ஏதேனும் பாடங்களில் தோல்வி அடைந்திருந்தால் அடுத்த 2 ஆண்டுகளில் அதனை எழுதி முடிக்க வேண்டும். இது 3 ஆண்டுகளாக உயர்த்தி கூடுதல் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

இளநிலை, முதுநிலை படிப்பை இடையில் நிறுத்தியவர்களுக்கு குறிப்பிட்ட ஆண்டுக்கு ஏற்ப சான்றிதழ் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் புதிய பாடங்கள் அறிமுகம் செய்யப்பட்டது.

Next Story