புதுக்கோட்டை மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் 4 பேர் காயம்; விசைப்படகு சேதம்


புதுக்கோட்டை மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் 4 பேர் காயம்; விசைப்படகு சேதம்
x
தினத்தந்தி 30 Jun 2019 11:15 PM GMT (Updated: 30 Jun 2019 7:54 PM GMT)

கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கினார்கள். மேலும் அவர்களுடைய விசைப்படகையும் சேதப்படுத்தினார்கள். இந்த தாக்குதலில் 4 மீனவர்கள் காயமடைந்தனர்.

கோட்டைப்பட்டினம்,

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீன்பிடி தளத்தில் இருந்து நேற்று முன்தினம் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த கலைவாணன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கலைவாணனின் மகன் கார்த்திக் (வயது 25), நந்தகோபால் மகன் குட்டியாண்டி (25), ராசு (65), மாரியப்பன் மகன் மனோகர் (36), ஆனந்த் (48) ஆகிய 5 பேரும் மீன்பிடிக்க சென்றனர்.

இவர்கள் நேற்று முன்தினம் இரவு இந்திய எல்லைக்கு உட்பட்ட கடல் பகுதியில் 25 நாட்டிக்கல் தொலைவில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர், கார்த்திக் உள்ளிட்ட 5 பேரும் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி அவர்களை கம்பி, கயிறு மற்றும் ஆயுதங்களால் தாக்கி உள்ளனர்.

மேலும் இலங்கை கடற்படையினர் தங்களது படகை, புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களின் விசைப்படகின் மீது மோதி உள்ளனர். இதில் படகு சேதமடைந்தது. பின்னர் இலங்கை கடற்படையினர் மீனவர்கள் வைத்திருந்த மீன்களை எடுத்துக்கொண்டு, அவர்களை திருப்பி அனுப்பி விட்டனர்.

இலங்கை கடற்படையினர் தாக்கியதில் குட்டியாண்டியை தவிர மற்ற 4 மீனவர்களுக்கும் காயம் ஏற்பட்டது. இது குறித்து மீனவர்கள் மீனவ சங்க நிர்வாகிகளுக்கும், கடலோர காவல் குழுமத்தினருக்கும் தகவல் கொடுத்துவிட்டு கரைக்கு வந்தனர்.

இதைத்தொடர்ந்து காயம் அடைந்த கார்த்திக், ராசு, மனோகர், ஆனந்த் ஆகிய 4 அவர்களை, மீனவ சங்க நிர்வாகிகளும், கடலோர காவல் குழுமத்தினரும் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த 4 மீனவர்களும் மணமேல்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். பின்னர் அவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து கடலோர காவல் குழுமத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கை கடற்படையினரால் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story