தரம் உயர்த்தி பல நாட்கள் ஆன நிலையில் ஆவடி மாநகராட்சி அலுவலக பெயர் பலகையைமாற்ற பொதுமக்கள் கோரிக்கை


தரம் உயர்த்தி பல நாட்கள் ஆன நிலையில் ஆவடி மாநகராட்சி அலுவலக பெயர் பலகையைமாற்ற பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 30 Jun 2019 11:15 PM GMT (Updated: 30 Jun 2019 9:44 PM GMT)

தரம் உயர்த்தி பல நாட்கள் ஆன நிலையில் ஆவடி மாநகராட்சி அலுவலக பெயர் பலகையை மாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஆவடி,

கடந்த பல ஆண்டுகளாக ஆவடி நகராட்சி பெருநகராட்சியாக செயல்பட்டு வந்த நிலையில் கடந்த மாதம் (ஜூன்) 18-ந்தேதி தமிழக அரசு ஆவடி பெருநகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அறிவித்தது. அதற்கான அரசாணையையும் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஆவடி மாநகராட்சியின் பெயர் பலகை மாற்றப்படாமல் இன்னும் ஆவடி பெருநகராட்சியாகவே உள்ளது. இதனால் அலுவலகம் வரும் பொதுமக்கள் மாநகராட்சியா? அல்லது பெருநகராட்சியா? என்ற குழப்பத்தில் உள்ளனர்.

தமிழக அரசு ஆவடி பெருநகராட்சியை மாநகராட்சி என்று அறிவித்துள்ள நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் பெயர் பலகையை மாநகராட்சி என்று மாற்றாமல் ஆவடி பெருநகராட்சி என்றே வைத்து உள்ளனர். இதனால் ஆவடி மாநகராட்சியின் தரம் குறைத்து காணப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் ஆவடி மாநகராட்சி என்று அரசு அறிவித்த நாளில் இருந்து பத்திரிகை மற்றும் ஊடகங்களில் ஆவடி மாநகராட்சி என்றே செய்திகள் வெளியிட்டு வருகின்றன. ஆனால் அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக பெயர் பலகையை ஆவடி மாநகராட்சி என்று மாற்றாமல் ஆவடி பெருநகராட்சி என்று அப்படியே வைத்துள்ளனர்.

எனவே உடனடியாக அலுவலகத்தில் ஆவடி மாநகராட்சி என்று பெயர் பலகையை வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story