முதல்-மந்திரி குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு மீது சித்தராமையா அதிருப்தி “எனது பேச்சுக்கு மதிப்பில்லை” என பரபரப்பு குற்றச்சாட்டு


முதல்-மந்திரி குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு மீது சித்தராமையா அதிருப்தி “எனது பேச்சுக்கு மதிப்பில்லை” என பரபரப்பு குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 1 July 2019 12:32 AM GMT (Updated: 1 July 2019 12:32 AM GMT)

முதல்-மந்திரி குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசில் எனது பேச்சுக்கு மதிப்பில்லை என்று கூட்டணி ஒருங்கிணைப்பு குழு தலைவர் சித்தராமையா அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சி களின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டணி ஆட்சி மீது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் படுதோல்வி அடைந்ததால், கூட்டணி கட்சி தலைவர்கள் மறைமுகமாக மோதிக் கொண்டுள்ளனர். ஆட்சியை கவிழ்த்துவிட்டு சட்டசபை தேர்தலை சந்திக்கவும் 2 கட்சிகளின் தலைவர்களும் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், கூட்டணி அரசின் மீது முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தனது அதிருப்தியை நேற்று பகிரங்கமாக வெளிப்படுத்தினார். விஜயாப்புரா மாவட்டம் அலமட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த சித்தராமையா கூறியதாவது:-

கூட்டணி ஆட்சியில் எல்லாம் சரியாக இருப்பதாக சொல்ல முடியாது. ஒருசில பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கிறது. மக்களும் சில பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். அந்த பிரச்சினைகளை சரி செய்ய என்னால் முடியாது. இதற்கு முன்பு நான் முதல்-மந்திரி ஆக இருந்தேன். அப்போது சில பிரச்சினைகளில் துணிச்சலான முடிவுகளை எடுத்தேன். நான் எடுத்த முடிவுகளுக்கு மதிப்பளிக்கப்பட்டது. அதனை ஏற்றும் கொண்டனர்.

தற்போது மக்கள் பிரச்சினையில் முடிவு எடுக்கவோ, அதனை தீர்க்கவோ நான் முதல்-மந்திரி அல்ல. நான், கூட்டணி ஆட்சியை முன்னெடுத்து செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் மட்டுமே. அதனால் நான் சொல்வதை யாரும் கேட்க மாட்டார்கள். எனது பேச்சுக்கும் மதிப்பில்லை. அதற்கான சூழ்நிைலயும் தற்போது இல்லை.

நான் முதல்-மந்திரியாக இருந்த போது புதிதாக சில தாலுகாக்கள் உருவாக்கப்பட்டது. அவ்வாறு உருவாக்கப்பட்ட தாலுகாக்களுக்கு தற்போது வரை அலுவலகம் இல்லை. தாசில்தாரோ, பிற ஊழியர்களோ நியமிக்கப்படவில்லை. இதன்மூலம் என்னுடைய உத்தரவுக்கு மதிப்பளிக்கவில்லை என்பதை அறிந்து கொண்டேன். கூட்டணி ஆட்சியில் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக மட்டுமே இருக்கிறேன். வேறு எந்த அதிகாரமும் எனக்கு இல்லை.

சட்டசபை தேர்தலில் பாதாமி தொகுதி மக்கள் எனக்கு ஆதரவாக வாக்களித்து வெற்றி பெற செய்தனர். தற்போது நாடாளுமன்ற தேர்தலில் பாகல்கோட்டை மக்கள் காங்கிரசை புறக்கணித்துள்ளனர். இவ்வாறு சித்தராமையா கூறினார்.

கூட்டணி ஆட்சியில் தனது பேச்சுக்கு மதிப்பில்லை என்று சித்தராமையா கூறி இருப்பது கூட்டணி அரசில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. சித்தராமையாவின் இந்த பேச்சால் ஜனதாதளம்(எஸ்) தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Next Story