வெட்டூர்ணிமடம் நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் கலெக்டரிடம் மனு


வெட்டூர்ணிமடம் நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 1 July 2019 11:00 PM GMT (Updated: 1 July 2019 2:41 PM GMT)

வெட்டூர்ணிமடம் நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

நாகர்கோவில்,

வாரந்தோறும் திங்கட்கிழமை நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும்  முகாம் நடைபெறுவது வழக்கம். இதேபோல் திங்கட்கிழமையான நேற்றும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. முகாமுக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்.

அப்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது வெவ்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 470 மனுக்களை கொடுத்தனர். அந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி, உரிய நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள உத்தரவிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் கலால் உதவி ஆணையர் சங்கரலிங்கம், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ஜெயராணி மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மக்கள் குறைதீர்க்கும் முகாமில் பனவிளை, கல்லுக்குட்டிவிளை, பெருமாள்விளை, வாழவிளை, முகமாத்தூர், காஞ்சிரவிளை, கோழிப்போர்விளை, அமராவதி ஆகிய கிராமங்களை சேர்ந்த வர்கள் விஜயகுமார் என்பவர் தலைமையில் மாநில பா.ஜனதா கட்சி துணைத்தலைவர் எம்.ஆர்.காந்தியுடன் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:–

கல்குளம் தாலுகா முளகுமூடு பேரூராட்சிக்கு உட்பட்ட முகமாத்தூர் அருகில் பைதாங்கி குளம் உள்ளது. இதை தூர்வார அனுமதி கேட்டு  5 ஆண்டுகளாக கலெக்டரிடம் மனு கொடுத்து வருகிறோம். அதன் பலனாக இப்போது கல்குளம் தாசில்தார் அனுமதி தந்தார். ஆனால் அனுமதி சீட்டு இல்லாத காரணத்தால் பொதுப்பணித்துறையினர் மண் எடுக்க முடியாது என்று கூறுகிறார்கள். அதனால் உடனடியாக அனுமதிச் சீட்டு தந்து உதவும்படி கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் இந்த குளத்தின் மூன்று பக்கங்களிலும் ஆக்கிரமிப்புகள் சூழ்ந்து உள்ளன. ஆக்கிரமிப்புகளை அகற்றித்தரும்படியும் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விசுவ இந்து பரி‌ஷத் மாநில இணைச்செயலாளரான இறச்சகுளத்தை சேர்ந்த காளியப்பன் என்பவர் தலைமையில் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–

குழித்துறையில் உள்ள கிளை சிறைச்சாலையில் விசாரணை கைதிகள் வைக்கப்படுவது வழக்கம். இங்குள்ள கைதிகள் மேல்சட்டை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் விசாரணை கைதிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். மேலும் இது மனித உரிமை மீறலுக்கான செயலாக உள்ளது. எனவே இந்த சிறையில் சட்டை அணிய விதிக்கப்பட்டு இருக்கும் தடையை உடனடியாக நீக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திருவட்டார் அருகே தேமானூரை சேர்ந்த வாள் விளையாட்டு வீரர் டேவிட்ராஜ் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:–

மதுவினால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். இந்தியா முழுவதும் பூரண மதுவிலக்கு கொண்டுவர வேண்டும் என்று அரசுகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தி வருகிறேன். தற்போது சமூக ஆர்வலர் முகிலன் காணாமல் போய் உள்ளார். அவரை உடனடியாக கண்டுபிடித்து அவருடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கடந்த சில நாட்களாக மக்களை சந்தித்து பிரசாரம் செய்து வந்தேன். இந்தநிலையில் 9–12–2017 அன்று 10 மணிக்கு என் தலைமையில் எங்கள் ஊரில் பஸ் மறியல் செய்ததாக 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். இது ஜனநாயகத்துக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்.

எங்கள் ஊர் மக்கள் மீது வழக்கு போட்ட போலீசார் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் ஒருவர் பணியில் இருந்தார். அதற்கான சான்றும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சேர்க்கப்பட்டு இருக்கும் நபர்கள் அனைவரும் ஒகி புயல் நிவாரணத்துக்கு ஆற்றூர் கிராம அலுவலகத்தில் மனு கொடுத்தவர்கள். அந்த மனு பெயர் பட்டியலை எடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் செயல்பட்டு வந்த ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் கோட்டார், சுசீந்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ளனர். அவர்கள் கலெக்டரிடம்  கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–

வெட்டூர்ணிமடத்தில் செயல்பட்டு வந்த ஒரு தனியார் நிதி நிறுவனம் ஏஜெண்டுகள் மூலம் மாதந்தோறும் ரூ.1000, ரூ.2000 என வசூலித்தது. இதனால் ஒவ்வொருவரும் ரூ.1 லட்சம், ரூ.2 லட்சம், ரூ.30 ஆயிரம், ரூ.25 ஆயிரம் என செலுத்தியிருக்கிறோம். பணம் செலுத்தியவர்களுக்கு அந்த நிறுவனம் பணத்தை திருப்பி தராததால் அந்த நிறுவனத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினோம். இந்தநிலையில் பணத்தை விரைவில் திரும்ப தருவதாகக்கூறிய அந்த நிறுவன நிர்வாகிகள் திடீரென நிறுவனத்தை மூடிவிட்டு சென்று விட்டனர். எனவே எங்களது பணத்தை திரும்ப பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் மனுவில் கூறியுள்ளனர்.

Next Story