கல்யாணில் பள்ளி சுவர் இடிந்து விழுந்து 3 பேர் பலி : பால்கரில் 2 பேர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழப்பு


கல்யாணில் பள்ளி சுவர் இடிந்து விழுந்து 3 பேர் பலி : பால்கரில் 2 பேர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழப்பு
x
தினத்தந்தி 2 July 2019 11:15 PM GMT (Updated: 2 July 2019 9:02 PM GMT)

கல்யாணில் பள்ளி சுவர் இடிந்து 3 பேர் பலியானார்கள். பால்கரில் 2 பேர் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தனர்.

அம்பர்நாத், 

மும்பையை போல தானே மற்றும் வசாய் பகுதிகளில் நேற்றுமுன்தினம் இரவு முதலே பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை நேற்றும் நீடித்தது.

இந்தநிலையில் நேற்று அதிகாலை கல்யாண் துர்கை போர்ட் அருகே உள்ள உருது பள்ளிக்கூடத்தின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து அருகில் இருந்த குடிசை வீட்டின் மீது விழுந்தது. இதில், வீட்டிற்குள் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த சோகன் காம்லே (வயது60), கரினா சந்த் (32) மற்றும் புசன் சந்த் (3) ஆகிய 3 பேர் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் ஒருவர் காயம் அடைந்தார்.

இதேபோல் தானே மற்றும் பயந்தர் இடையே உள்ள ஜென்னா ஓடையில் 3 பேர் காருக்குள் சிக்கிக்கொண்டனர். தகவலின்பேரில் சென்ற பேரிடர் மீட்பு படையினர் 3 பேரையும் காருக்குள் இருந்து பத்திரமாக மீட்டனர்.

பாஸ்கர் காலனியில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர். பால்கர் ஜவ்கர் பகுதியில் உள்ள குண்டன்பர்தாவில் ஜானு உம்பர்சாடா(60) என்பவர் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார். மேலும் தகானு பாஜிபாடாவில் கைலாஸ் நக்தே (29) என்பவரும் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பலியானார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து பெய்து வரும் மழையால் சூர்யா, வைத்தர்ணா மற்றும் பின்ஜல் ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்கள் வெளியேறி வருகின்றனர்.

Next Story