ஆரணி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி


ஆரணி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி
x
தினத்தந்தி 3 July 2019 10:00 PM GMT (Updated: 3 July 2019 3:11 PM GMT)

ஆரணி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஆரணி, 

ஆரணியை அடுத்த அக்ராபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் துரை. இவரது மகன் விஜயகுமார் (வயது 25), கூலித் தொழிலாளி. இவரது தங்கை வினிதாவின் திருமணம் வருகிற 15-ந் தேதி நடைபெற உள்ளது. இதை யொட்டி நண்பர்களுக்கு திருமண பத்திரிகை கொடுப்பதற்காக அவரது நண்பர்கள் சதீஷ், பூவரசன் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

ஆரணி - வேலூர் நெடுஞ்சாலையில் சோமந்தாங்கல் கூட்ரோடு அருகே சென்ற போது இவர்களுக்கு முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் திடீரென திரும்பியதால் விஜயகுமார் சென்ற மோட்டார் சைக்கிளும், முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் விஜயகுமார், சதீஷ், பூவரசன் மற்றும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தவர் என மொத்தம் 4 பேர் படுகாயம் அடைந்தனர். உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக விஜயகுமார் மட்டும் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story