திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் புதிய தண்டவாளங்கள் பொருத்தும் பணி தீவிரம்


திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் புதிய தண்டவாளங்கள் பொருத்தும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 3 July 2019 11:00 PM GMT (Updated: 3 July 2019 5:26 PM GMT)

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் புதிய தண்டவாளங்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

திருச்சி,

ரெயில்வே தண்டவாள பாதையில் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒரு முறை தண்டவாளம் மாற்றப்படுவது வழக்கம். பழைய தண்டவாளங்களை மாற்றிவிட்டு புதிய தண்டவாளம் பொருத்தப்படும். அந்த வகையில் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் முதலாவது மற்றும் 1 ஏ நடைமேடையில் இருந்து கரூர் நோக்கி செல்லக்கூடிய பாதையில் குறிப்பிட்ட தூரம் வரை தண்டவாளம் அமைக்கப்பட்டு 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. இதையடுத்து அதனை மாற்ற ரெயில்வே அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி தண்டவாளங்களை மாற்ற ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். முன்பு ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு தண்டவாளங்கள் மாற்றப்படும். தற்போது இந்த நடைமுறையில் இல்லாமல் நவீன முறையில் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதாவது சிலிப்பர் கட்டைகளுடன் தண்டவாளத்தை பொருத்தி தனியாக வைக்கப்படும். அதன்பின் பழைய தண்டவாளத்தை அகற்றிவிட்டு அந்த இடத்தில் சிலிப்பர் கட்டைகளுடன் பொருத்திய புதிய தண்டவாளம் வைக்கப்படும். இதன் மூலம் ரெயில் போக்குவரத்தில் அதிகம் பாதிப்பு ஏற்படாது.

இந்த நிலையில் புதிய தண்டவாளங்கள் அமைப்பதற்காக ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் முதலாவது நடைமேடையில் பொன்மலை செல்லும் பகுதியில் சிலிப்பர் கட்டைகள், தண்டவாளங்களை வைத்து பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணி ஒரிரு நாட்களில் முடிவடையும் எனவும், அதன்பின் பழைய தண்டவாளங்களை அகற்றிவிட்டு புதிய தண்டவாளங்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். புதிய தண்டவாளம் பொருத்தும் பணி நடைபெறும் நாளில் ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story