நடைபாதை, தரைக்கடை பிரச்சினைகளுக்கு இன்னும் 60 நாட்களில் தீர்வு வணிகர் சங்க நிர்வாகிகளிடம் மாநகராட்சி ஆணையர் உறுதி


நடைபாதை, தரைக்கடை பிரச்சினைகளுக்கு இன்னும் 60 நாட்களில் தீர்வு வணிகர் சங்க நிர்வாகிகளிடம் மாநகராட்சி ஆணையர் உறுதி
x
தினத்தந்தி 3 July 2019 10:45 PM GMT (Updated: 3 July 2019 9:35 PM GMT)

நடைபாதை, தரைக்கடை பிரச்சினைகளுக்கு இன்னும் 60 நாளில் தீர்வு காணப்படும் என வணிகர் சங்க நிர்வாகிகளிடம் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உறுதி அளித்ததை தொடர்ந்து 9-ந் தேதி நடைபெற இருந்த கடையடைப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

திருச்சி,

திருச்சி மலைக்கோட்டை பகுதி அனைத்து வணிகர்கள் சங்க தலைவரும், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளருமான வி.கோவிந்தராஜூலு தலைமையில் செயலாளர் சந்திரசேகர், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு திருச்சி மண்டல தலைவர் தமிழ்ச்செல்வன், மாநில துணைத்தலைவர் ரங்கநாதன், திருச்சி மாவட்ட தலைவர் ஸ்ரீதர் மற்றும் மலைக்கோட்டை பகுதியில் ஜவுளி, ஜூவல்லரி கடைகள் நடத்தி வரும் தொழில் அதிபர்கள் நேற்று மாலை திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.

பின்னர் அங்கு ஆணையர் ரவிச்சந்திரனை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

திருச்சி மலைக்கோட்டைக்கு அருகே அமைந்துள்ள என்.எஸ்.பி.ரோடு, நந்திகோவில் தெரு, தேரடி பஜார், சின்னக்கடை வீதி உள்ளிட்ட பகுதிகள் நகரத்தின் இதயம் போன்றவை. இங்கு ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், வீட்டு உபயோக பொருட்கள், உணவு பொருட்கள் மற்றும் ஏனைய வணிக நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இப்பகுதிகளில் தரைக்கடைகள், நடைபாதை கடைகள், தள்ளுவண்டி கடைகள் வைத்து ஏராளமானோர் ஆக்கிரமித்து இடையூறு செய்து வருகிறார்கள்.

குறிப்பாக அனைத்து வணிக நிறுவனங்களின் நுழைவு வாயிலையும், அதன் அருகே உள்ள இடங்களையும் ஆக்கிரமிப்பு செய்து கொண்டிருக்கிறார்கள். ஒருவர், இருவர் என தொடங்கப்பட்ட கடைகள் இன்று நூற்றுக்கணக்கில் விரிவடைந்து விட்டது.

தரைக்கடைகளை அகற்ற வணிக நிறுவனத்தினர் கூறும்போது மிரட்டப்படுகிறார்கள். அத்தகைய கடைகளால் மாநகராட்சிக்கோ, அரசுக்கோ எந்தவித வருவாயும் இல்லை. ஆனால், இக்கடைகளை வைத்து பலரும் பல வழிகளில் பொருள் ஈட்டி வருகிறார்கள்.

அதே வேளையில் வணிக நிறுவனத்தினர் அரசின் நடைமுறைகளை பின்பற்றி விற்பனை வரி, தொழில் வரி, உள்ளிட்டவை செலுத்தி வருகிறோம். எனவே, மேற்கண்ட இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை முற்றிலுமாக அகற்றிட வேண்டும். சாலையோர கடைக்காரர்களுக்கு மாற்று இடம் வழங்கி தீர்வு காணவேண்டும். இது தொடர்பாக வருகிற 9-ந் தேதி கடையடைப்பு நடத்த முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

மனுவை முழுமையாக படித்த பின்னர் ஆணையர் ரவிச்சந்திரன் கூறுகையில்,“போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள தரைக்கடைகள், நடைபாதை கடைகளை அகற்றுவது தொடர்பாக 45 நாட்களில் ஒரு குழு ஏற்படுத்தப்படும். அக்குழுவினர் அதன் சாதக பாதகங்களை ஆய்வு செய்து அதன் பின்னர் 15 நாட்களில் தீர்வு காணப்படும். அதாவது இப்பிரச்சினை யில் 60 நாளில் முழுமையான தீர்வு காணப்படும்” என்றார்.

பின்னர் ஆணையர் அலுவலகத்தை விட்டு வெளியே வந்த கோவிந்தராஜூலு கூறுகையில், ‘எங்கள் கோரிக்கையை ஆணையர் ஏற்று குழு ஒன்றை அமைத்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். எனவே, வருகிற 9-ந் தேதி நடத்துவதாக அறிவித்த கடையடைப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படு கிறது” என்றார்.

Next Story