கறம்பக்குடி அருகே கூடுதல் பஸ் வசதி கேட்டு கல்லூரி மாணவர்கள் மறியல் போக்குவரத்து பாதிப்பு


கறம்பக்குடி அருகே கூடுதல் பஸ் வசதி கேட்டு கல்லூரி மாணவர்கள் மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 4 July 2019 10:15 PM GMT (Updated: 4 July 2019 8:25 PM GMT)

கறம்பக்குடி அருகே கூடுதல் பஸ் வசதி கேட்டு கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள மருதன்கோன் விடுதி நால்ரோட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு கறம்பக்குடி, கந்தர்வகோட்டை, ரெகுநாதபுரம், ஊரணிபுரம் ஆகிய பகுதிகளிலிருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். ஆனால் இந்த வழித்தடத்தில் போதுமான பஸ்கள் இயக்கப்படவில்லை.

இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் இயக்கப்படும் ஒரே அரசு பஸ்சில், நூற்றுக்கணக்கான மாணவர்கள் சென்று வருகின்றனர். ஆபத்தான இந்த பயணத்தால் விபத்துகள் ஏற்படுவதும் தொடர்ந்து வருகிறது. இதுகுறித்து கல்லூரி மாணவர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சாலை மறியல்

மேலும் இயக்கப்படும் ஒரு சில பஸ்களும் சரிவர இயக்கப்படுவதில்லை. இதனால் கல்லூரிக்கு செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டு வருகிறது. நேற்று கூட்டம் அதிகமாக இருந்ததால் ஒரு அரசு பஸ்சில் மாணவர்களை ஏற்றிச்செல்ல முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் மருதன்கோன்விடுதி நால் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது கறம்பக்குடி, ஊரணிபுரம், கந்தர்வகோட்டை பகுதியிலிருந்து அரசு கல்லூரிக்கு டவுன் பஸ் இயக்க வேண்டும். மேலும் அந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ் வசதி வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் மருதன்கோன்விடுதி நால்ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story