கிருஷ்ணகிரியில் ரேஷன்கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


கிருஷ்ணகிரியில் ரேஷன்கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 July 2019 10:45 PM GMT (Updated: 5 July 2019 4:14 PM GMT)

கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன்கடை பணியாளர் சங்கத்தினர் சார்பில் கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், மாவட்ட தமிழ்நாடு அரசு ரேஷன்கடை பணியாளர் சங்கத்தின் சார்பில் 30 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத் தலைவர் சோமேஸ்வரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சங்கர், மாவட்ட செயலாளர் நாகேஷ், மாவட்ட பொருளாளர் பாலசுந்தரம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

இதில் அரசு பணியாளர்களுக்கு வழங்குவது போல் மாதந்தோறும் மருத்துவ படியை ரூ. 300 ஆக உயர்த்தி வழங்கிட வேண்டும். ரேஷன்கடை ஊழியர்களிடம் கட்டுப்பாடற்ற பொருட்களை விற்பனை செய்ய நிர்ப்பந்திக்க கூடாது. பழுதடைந்த கோணிப்பைகளுக்கு பணம் வசூல் செய்வதை நிறுத்த வேண்டும். 500 குடும்ப அட்டைகள் மேல் உள்ள ரேஷன் கடைகளுக்கு கூடுதலாக ஆட்களை நியமிக்க வேண்டும்.

பொது வினியோக திட்டத்திற்கான தனித்துறை அமைக்க வேண்டும். கூட்டுறவுத்துறை ரேஷன் கடை பணியாளர்களுக்கு டி.என்.சி.எஸ்.சி.க்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

Next Story