மதுரை அருகே அடுக்குமாடி கட்டிடம் இடிந்து இடிபாடுகளில் புதைந்த 2 பேர் பிணமாக மீட்பு; சாவு எண்ணிக்கை 3 ஆனது


மதுரை அருகே அடுக்குமாடி கட்டிடம் இடிந்து இடிபாடுகளில் புதைந்த 2 பேர் பிணமாக மீட்பு; சாவு எண்ணிக்கை 3 ஆனது
x
தினத்தந்தி 6 July 2019 11:30 PM GMT (Updated: 6 July 2019 10:18 PM GMT)

மதுரை அருகே கட்டுமான பணியின்போது அடுக்குமாடி கட்டிடம் இடிந்து இடிபாடுகளில் புதைந்த 2 பேர் நேற்று அதிகாலையில் நீண்ட போராட்டத்துக்கு பின்பு பிணமாக மீட்கப்பட்டனர்.

செக்கானூரணி,

மதுரை அருகே செக்கானூரணி அரசு பள்ளி பின்புறம் அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. 2 மாடிகள் கொண்டதாக இந்த கட்டிடம் கட்டப்பட்டது.

நேற்று முன்தினம் கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருந்தன. இந்த பணியில் 7 தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்த நிலையில் மாலை 6 மணி அளவில் திடீரென்று அந்த கட்டிடம் இடிந்து விழுந்தது.

கட்டிடத்தின் இரண்டு தளங்கள் முழுவதுமாக இடிந்து தரைதளத்தில் விழுந்தன. அப்போது அங்கு வேலை செய்து கொண்டிருந்த ராஜேஷ் (வயது 30), முருகன் (36), கார்த்திக் (28), ஆதவன் முனியாண்டி, காசிநாதன் (45), பாலு (38), அருண் (25) ஆகிய 7 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர், போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் இடிபாடுகளில் சிக்கி காயம் அடைந்த 5 பேரை அடுத்தடுத்து மீட்டனர். அவர்களில் காசிநாதன் என்பவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் வழியில் பரிதாபமாக இறந்தார்.

மேலும் இடிபாடுகளுக்குள் உயிரோடு புதைந்த பாலு, அருண் இருவரையும் மீட்பதில் கடும் சவால் காத்திருந்தது. கட்டிடம் பெரும் அளவில் இடிந்திருந்ததால் மீட்பு பணியில் ஈடுபட்டவர்களால் உள்ளே நுழைய முடியவில்லை. எனவே கட்டிடத்தின் பெரும்பகுதியை இடித்து அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.

நேற்று முன்தினம் நள்ளிரவில் இந்த பணிகள் பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் நடைபெற்றன. அந்த பகுதியை சேர்ந்த மக்கள் மிகுந்த சோகத்துடன் திரண்டிருந்து இதனை பார்த்தனர்.

பெரும் போராட்டத்துக்கு பின்பு நேற்று அதிகாலை 3 மணி அளவில் இடிபாடுகளில் சிக்கியிருந்த பாலு மற்றும் அருண் ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர். அவர்களது உடல்களை பார்த்து உறவினர்கள் கதறியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. உடனடியாக இருவரது உடல்களும் மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டன. இதனால் இந்த சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக கட்டிட உரிமையாளர் மாதவன் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், அனுமதியை மீறி இந்த கட்டிடம் கட்டியது தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

Next Story