நாகர்கோவிலில் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


நாகர்கோவிலில் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 July 2019 11:00 PM GMT (Updated: 8 July 2019 2:47 PM GMT)

நாகர்கோவிலில் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

நாகர்கோவில்,

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்க குமரி மாவட்ட கிளை சார்பில் நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் செயலாளர்களை பொதுப்பணி நிலைத்திறன்படி மாற்றம் செய்ய அரசு பிறப்பித்த ஆணையை நிறுத்தம் செய்ய வேண்டும். ஏனெனில் சங்கங்களில் பணிபுரியும் செயலாளர்களின் சம்பள விகிதம் சங்கத்திற்கு சங்கம் வேறுபாடு உடையதாக இருக்கும். அப்படி இருக்க செயலாளர்களை பணியிட மாற்றம் செய்தால் பணியாளர்கள் மத்தியில் கடும் விரக்தி ஏற்படும். மேலும் ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு கருணை ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தின் மூலம் வலியுறுத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் சகாய திலகராஜ் முன்னிலை வகித்தார். துணை தலைவர்கள் வின்சென்ட் ராஜ், செல்வின் ஜோஸ், இணை செயலாளர்கள் ரமணி, வசந்தபிரபா உள்பட பலர் கலந்துகொண்டனர். மேலும் ஓய்வுபெற்ற பணியாளர்களும் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

ஆர்ப்பாட்டம் முடிந்ததும் தங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதி கலெக்டர் பிரசாந்த் வடநேரேவை சந்தித்து கொடுத்தனர்.

Next Story