திருச்சி அருகே போலீஸ் ஏட்டை கத்தியால் வெட்டிய ரவுடி தகராறு செய்ததை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்


திருச்சி அருகே போலீஸ் ஏட்டை கத்தியால் வெட்டிய ரவுடி தகராறு செய்ததை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்
x
தினத்தந்தி 8 July 2019 11:15 PM GMT (Updated: 8 July 2019 7:13 PM GMT)

திருச்சி அருகே பொது இடத்தில் தகராறு செய்ததை தட்டிக்கேட்ட போலீஸ் ஏட்டை, ரவுடி கத்தியால் சரமாரியாக வெட்டினார்.

பொன்மலைப்பட்டி,

திருச்சி அரியமங்கலம் உக்கடை பகுதியை சேர்ந்தவர் இஸ்மாயில்(வயது 39). மீன் வியாபாரியான இவர் மீது காந்தி மார்க்கெட் போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. ரவுடியான இவர் அடிக்கடி அரியமங்கலம் பகுதியில் போதையில் தகராறு செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று மாலை அவர் அங்கு தகராறில் ஈடுபட்டார். இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த சிலர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். இதுபற்றி காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து அரியமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு பணியில் இருந்த போலீஸ் ஏட்டு ஹரிஹரன்(40) சம்பவ இடத்துக்கு சென்று, இஸ்மாயிலை அடித்து விரட்டினார்.

இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இஸ்மாயில் அங்கிருந்து சென்று விட்டார். இதையடுத்து ஏட்டு ஹரிஹரன் அங்கிருந்து புறப்பட்டு சிறிது தூரம் சென்றார். அப்போது அவருக்கு பின்னால் ஓடி வந்த இஸ்மாயில், மீன் வெட்ட பயன்படுத்தப்படும் கத்தியால் ஏட்டு ஹரிஹரனை சரமாரியாக வெட்டினார்.

இதில் அவருடைய தலை, கை, தோள்பட்டையில் வெட்டு விழுந்தது. சத்தம் கேட்டு அந்த பகுதியினர் ஓடி வந்தனர். அதற்குள் இஸ்மாயில் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

உடனே ஏட்டு ஹரிஹரனை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், துணை கமிஷனர்கள் மயில்வாகனன், நிஷா மற்றும் போலீசார் அரசு மருத்துவ மனைக்கு சென்று ஏட்டு ஹரிஹரனை பார்த்தனர்.

பின்னர் அவருக்கு ஏற்பட்ட வெட்டு காயங்கள் குறித்து டாக்டர்களிடம் கேட்டு அறிந்தனர். அங்கிருந்த ஹரிஹரனின் தந்தைக்கு கமிஷனர் ஆறுதல் கூறினார். இந்த சம்பவம் குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதல்கட்ட விசாரணையில், கஞ்சா போதையில் இஸ்மாயில் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அவரை பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சியில் சீருடையில் இருந்த போலீஸ் ஏட்டை ரவுடி அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story